தேனி | தண்டவாளம் அருகே அடையாளம் தெரியாத ஆண், பெண் சடலங்கள் மீட்பு - ரயில்வே போலீசார் விசாரணை
செய்தியாளர்: ரமேஷ் கண்ணன்
தேனி அருகே குன்னூரில் மதுரை - போடிநாயக்கனூர் அகல ரயில்பாதை அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத ஆண், பெண் இருவரது சடலங்கள் கிடப்பது ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீசார் நிகழ்விடத்தை ஆய்வு செய்தனர்.
இதையடுத்து ஆண், பெண் இருவரது உடல்களும் முற்றிலும் சிதைந்து கிடந்தது. மேலும் இறந்தவர்கள் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் 30 வயது மதிக்கத்தக்க பெண் எனத் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து இருவரது சடலங்களையும் மீட்டு உடற்கூராய்வுக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், ரயில்வே போலீசார், ரயிலில் அடிபட்டு இறந்தார்களா, இறந்தவர்கள் யார்? விபத்தா அல்லது தற்கொலையா என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.