தேனி: அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ரூ.11 கோடிக்கு மேல் இழந்த பொதுமக்கள்
தேனியில் அதிக வட்டி தருவதாகக் கூறி ரூ.11 கோடிக்கு மேல் மோசடி செய்த நிதி நிறுவன அதிபரை கைது செய்யக்கோரி ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து ஆட்சியர் முரளிதரனிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில்,
கடந்த 2019 ஆம் ஆண்டு யுனிவர்சல் டிரேடிங் கார்ப்பரேஷன் என்ற பெயரில் தேனியில் தனியார் நிதி நிறுவனம் துவங்கப்பட்டது. இந்நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மாதம்தோறும் 10 சதவீதம் வட்டி தருவதாகவும், 10 சதவீத வட்டியில் ஒரு சதவிகித வட்டி அரசுக்கு வருமான வரியாகச் செலுத்தி விடுவதாகவும் தெரிவித்தனர் .
இதை நம்பி தேனி நகர் மற்றும் மாவட்டம் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கானோர் ரூபாய் 11 கோடிக்கும் மேல் முதலீடு செய்துள்ளனர். நிதி நிறுவனம் துவங்கிய முதல் மூன்று மாதம் வட்டியை முறையாக வழங்கினர். பின் கொரோனா முடக்கத்தை காரணம்காட்டி வட்டி வழங்குவதை நிறுத்தி விட்டனர்.
இந்நிலையில் நிதி நிறுவனம் பூட்டப்பட்டு பணம் வாங்கியவர்கள் தலைமறைவாகிவிட்டனர். இந்த மோசடி தொடர்பாக மாவட்ட எஸ்பி அலுவலகம், காவல் நிலையங்களில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
எனவே 11 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்த நிதி நிறுவன அதிபரை கைது செய்வதோடு பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இழந்த தொகையை மீட்டுத் தர ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
பொதுமக்களிடம் இந்த கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் முரளிதரன், இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். இது குறித்து சம்பந்தப்பட்ட காவல் துறைக்கும் விசாரணை நடத்த அவர் உத்தரவிட்டார்.