தேனி | ரகசிய தகவலின் பேரில் போலீசார் அதிரடி சோதனை... 14 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் - ஒருவர் கைது
செய்தியாளர்: மலைச்சாமி
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா உப்புத்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் மச்சக்காளை. இவர், உப்புத்துறை மலை அடிவாரப் பகுதியில், காட்டுப் பன்றிகளை வேட்டையாடுவதற்காக 14 நாட்டு வெடிகுண்டுகளை தயார் செய்து வைத்திருந்தார். இதுகுறித்து சிலர் ரகசியமாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து போலீசார், நேற்று காலை கடமலைக்குண்டு சார்பு ஆய்வாளர் பிரேம் ஆனந்த் தலைமையிலான போலீசார், அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு 14 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய மச்சக்காளையை தேடிவந்தனர்
இந்நிலையில், உப்புத்துறை யானைகஜம் மலைப்பகுதியில் பதுங்கி இருந்த மச்சக்காளையை சுற்றிவளைத்து கைது செய்த கடமலைக்குண்டு போலீசார், அவரை சிறையில் அடைத்தனர் இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.