விவசாயி இறந்ததாகக் காட்டி அரசின் உதவிகளை சுருட்டிய அதிகாரிகள்
தேனி அருகே உயிரோடு உள்ள விவசாயியை இறந்ததாக காட்டி அவருக்குரிய பணப் பலன்களை அதிகாரிகள் சிலர் மோசடி செய்து திருடியதாகப் புகார் எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட நபர், நூதன முறையில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.
தேனி மாவட்டம் கடமலைகுண்டு அருகில் உள்ள கரட்டுபட்டியை சேர்ந்தவர் பெருமாள், கூலி வேலை செய்து வரும் இவர், குடும்பச்சூழல் காரணமாக கேரளாவுக்கு வேலைக்குச் சென்றிருந்தார். இந்நிலையில், அவர் இறந்துவிட்டதாகக் கூறி அரசின் நிவாரணத்தை போலி ஆவணங்கள் மூலம் பெற்றதாக சமூக நலத்துறை அதிகாரிகள் புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது பெருமாள் உயிருடன் இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெருமாள், தான் இறந்ததாக கூறி அதிகாரிகள் மோசடி செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். இறந்தவர் போல மாலை அணிந்து வந்து இவர் புகார் அளித்ததால் அங்கிருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
இதேபோன்று 50க்கும் அதிகமானோரை இறந்ததாகக் கூறி மோசடி நடந்துள்ளதாக இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். வட்டாட்சியரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் மாவட்ட ஆட்சியராவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடமலைக்குண்டு பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.