சிறுமியைக் கடத்திச் சென்று கர்ப்பமாக்கியவர் கைது
ஓமலூர் அருகே 16 வயது சிறுமியைக் கடத்தி சென்று கர்ப்பமாக்கிய இரண்டு குழந்தைகளின் தந்தையை போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காடையாம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட சந்தைபேட்டை பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருக்கு16 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்தப் பெண் அருகில் உள்ள அரசுப் பள்ளியில் 9-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த சிறுமி காணவில்லை. இது குறித்து தீவட்டிப்பட்டி காவல்நிலையத்தில் கணேசன் புகார் கொடுத்தார். அப்போது சிறுமி காணாமல் போய் விட்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்தநிலையில் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் ஊராட்சி சேவிக்காடு பகுதியை சேர்ந்த ரமேஷ் என்ற விவசாயி சிறுமியைக் கடத்தி சென்றது தெரிய வந்தது. ரமேஷுக்கு திருமணமாகி சுரேகா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
இந்தநிலையில் சிறுமி காணாமல்போன வழக்கில் ரமேஷ் சிறுமியைக் கடத்தி சென்றதை தீவட்டிப்பட்டி போலீசார் கண்டு பிடித்தனர். மேலும், சிறுமியை ஆத்தூரில் பதுக்கி வைத்திருப்பதை அறிந்த தீவட்டிப்பட்டி போலீசார் ரமேஷை அதிரடியாக கைது செய்தனர். இதனை தொடர்ந்து நடத்திய விசாரனையில் கடந்த ஓராண்டிற்கு முன்பு இதே சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அப்போது ஓமலூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் ரமேஷை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த ரமேஷ் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு மீண்டும் அதே சிறுமியை கடத்தி சென்றார். ஆத்தூர் பகுதியில் விவசாய தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து யாருக்கும் தெரியாமல் மனைவியின் சம்மதத்துடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
தொடர்ந்து மனைவி குழந்தைளைகளுடன் சிறுமியையும் வைத்து ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். தொடர்ந்து கடத்தப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததில் சிறுமி கர்ப்பமாகி தற்போது ஏழு மாதக் கர்ப்பிணியாக இருப்பதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து ரமேஷிடம் இருந்து மீட்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனை செய்து, சேலம் பெண்கள் காப்பகத்தில் விட்டுள்ளனர். இதை தொடர்ந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கர்ப்பமாக்கிய ரமேஷை கைது செய்து சேலம் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.