விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கோட்டையூர் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். விவசாய தொழிலாளியான இவருக்கு பாண்டீஸ்வரி என்ற மனைவியும் வைத்தீஸ்வரி (15), காளீஸ்வரி (11) ஆகிய இரு மகள்களும், விக்னேஸ்வரன் என்ற மூன்று வயது மகனும் இருந்தனர்.
இந்த நிலையில் ஈஸ்வரனுக்கு கடந்த சில மாதங்களாக கிட்னி பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மூன்று தினங்களுக்கு முன்பு பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட பாண்டிஸ்வரி, இன்று தங்களுக்குச் சொந்தமான கிணற்றில் தனது மூன்று குழந்தைகளையும் தள்ளிவிட்டு விட்டு தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த வத்திராயிருப்பு காவல் துறையினர் உயிரிழந்த 4 பேரின் சடலங்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
[தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.]