மதுரை நாகமலை புதுக்கோட்டையில் நாடார் மஹாஜன சங்க 72 ஆவது மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார். அங்கு அவர் பேசிய போது...
”தமிழ்நாட்டிலேயே எனக்கு இரண்டு தலைவர்களை ரொம்ப பிடிக்கும் ஒன்று பெரியார் மற்றொருவர் காமராஜர். நான் ஓட்டுக்காகவோ தேர்தலுக்காகவோ இங்கு வரவில்லை. நம் சமுதாயம் முன்னேற வேண்டும். காமராஜர் ஒரு சமுதாயத்தின் தலைவராக இருக்கக் கூடாது. இந்தியாவின் தலைவராக இருக்க வேண்டும்.
28 ஆயிரம் பள்ளிகளை உருவாக்கியவர் காமராஜர். உத்திரப்பிரதேசம், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் இருந்தது போன்றதை மாற்றியமைத்தவர் காமராஜர். தமிழ்நாட்டில் தொழில் புரட்சியை ஏற்படுத்தியவர் காமராஜர். நீர் மேலாண்மை புரட்சியை செய்த காமராஜர், 13 நீர்ப்பாசன திட்டங்களை உருவாக்கினார். அது இல்லை என்றால் இன்று தமிழகம் வறண்ட மாநிலமாக மாறிவிடும்.
இது சமூக நீதி மாநாடு. அனைத்து பள்ளிகளையும் திறந்தவர் காமராஜர் ஆனால் இப்போது அரசு பள்ளிகளை மூடி வருகின்றனர். 12 அணைகளைக் கட்டி நீர் மேலாண்மை செய்தார் தற்போது இதனை மூடி வருகின்றனர். திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குள் செல்லக் கூடாது என அப்போது தடுத்தார்கள் இப்போது அறங்காவலராக நாடார்கள் தான் உள்ளனர். தென் மாவட்டத்திலேயே தொழிற்சாலை வரவில்லை நீர் மேலாண்மை வரவில்லை ஏன் ஏன் என்று தான் கேள்விகள் எழுகிறது.
நம்ம ஆளுகின்ற காலம் வந்து விட்டது. நமக்குத் தேவை எம்எல்ஏ, எம்பி கிடையாது. முதலமைச்சர், துணை முதலமைச்சர், ஆட்சி அதிகாரம். காமராஜருக்கு பிறகு வந்தவர்கள் எந்த ஒரு திட்டமும் கொண்டு வரவில்லை. வாருங்கள் நம்ம எல்லாம் ஒன்றாய் சேர்வோம். சேர வேண்டிய காலம் வந்து விட்டது. நம்ம ஆளணும், அவர்கள் ஆண்டது போதும். ஒரு ஐந்து ஆண்டு காலம் ஆண்டு பார்ப்போமே. சரியில்லை என்றால் ஒதுங்கிக் கொள்வோம்.
ஜாதி வாரி கணக்கெடுப்பு என்பது எண்ணிக்கை கிடையாது, இப்ப அவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதை அறிவதற்கு. ஐயா மருத்துவர் ஆனதற்கு காரணமே காமராஜர் தான் என்று என்னிடம் சொல்லியிருக்கிறார் என்று அன்புமணி ராமதாஸ் பேசினார்.