கோயில் சிலருக்கானது அல்ல பொதுமக்களுக்கானது - உயர்நீதிமன்ற நீதிபதிகள்
கோயில் சிலருக்கானது அல்ல பொதுமக்களுக்கானது என்றும், கோயில் வழிபாட்டிற்கான தலமே தவிர வியாபாரத்தளம் அல்ல என்றும், தனி நபர்கள் கோயிலின் பெயரில் நடத்தும் இணையதளம் மூலமாக ஆயிரக்கணக்கில் இல்லாமல் லட்சக்கணக்கில் பணம் வசூலிப்பதை முழுமையாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரைக்கிளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்கள் மற்றும் மடங்களின் பெயரில் போலியாக செயல்படும் இணையதளங்களை முடக்க கோரிய வழக்கில், சைபர் கிரைமின் தமிழக கூடுதல் காவல்துறை தலைவர் மற்றும் மத்திய அரசை எதிர் மனுதாரராக சேர்க்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ராமநாதபுரத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பல முக்கிய கோயில்கள், மடங்கள் செயல்பட்டு வருகின்றன. இக்கோயில்களுக்கு வெளிநாட்டில் இருந்து வந்து செல்லும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இக்கோயில்களுக்கு நேரடியாக வரும் பக்தர்கள் காணிக்கைகளை செலுத்தி அதற்கான ரசீதுகளை பெற்று செல்கின்றனர். ஆனால் வெளி மாவட்டங்கள், வெளியூர், வெளிநாட்டில் இருக்கும் பக்தர்கள் கோயில் இணையதளத்தில் உள்ள கணக்குகளில் பணத்தினை செலுத்துகின்றனர்.
தமிழகத்தில் உள்ள சென்னை கபாலீஸ்வரர் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், திருச்சி ஸ்ரீரங்கம் கோயில், பழனி முருகன் கோயில், சென்னை வடபழனி ஆண்டாள் கோயில், பார்த்தசாரதி கோயில் ஆகிய கோயில்களின் பெயரில் சில தனியார் இணையதள முகவரி வைத்துக்கொண்டு, கோயிலுக்கு பக்தர்கள் அனுப்பும் காணிக்கைகளை பெற்று மோசடி செய்து வருகின்றனர். இது குறித்து பல மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்கள் மற்றும் மடங்களின் பெயர்களில் போலியாக செயல்படும் இணையதளங்களை முடக்கவும், அவ்வாறு இணையதளம் வைத்திருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்." என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், இந்து சமய அறநிலையத்துறையின் மயிலாடுதுறை இணை ஆணையர் நேரில் ஆஜராகி, "கோயில் பெயரில் தனி நபர்கள் வைத்திருந்த இணையதள முகவரி முடக்கம் செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
அப்போது பேசிய நீதிபதிகள், * உங்களது கோயில் பெயரில் மற்றொருவர் இணையதள முகவரியை எவ்வாறு வைத்திருந்தார்? என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து நடவடிக்கை எடுக்க அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி நீங்கள் தான் என குறிப்பிட்ட நீதிபதிகள் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினர். மேலும் தனி நபர்கள் கோயிலின் பெயரில் நடத்தும் இணையதளம் மூலமாக ஆயிரக்கணக்கில் இல்லாமல் லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கின்றனர். இதனை முழுமையாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோயில் கோயிலாக இருக்க வேண்டும். கோயில் வழிபாட்டிற்கான தலம்தானே தவிர வியாபார தலம் அல்ல மற்றும் கோயில் சிலருக்கானது அல்ல, பொதுமக்களுக்கானது"என கருத்து தெரிவித்த நீதிபதிகள், சைபர் கிரைமின் தமிழக கூடுதல் காவல்துறை தலைவர் மற்றும் மத்திய அரசை இந்த வழக்கில் எதிர் மனுதாரராக இணைத்தும், இதே போன்ற மற்றொரு வழக்குடன், இந்த வழக்கையும் சேர்த்துப் பட்டியலிட உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.