பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைப்பு
பொதுச் சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது
1998 ஆம் ஆண்டில், ஒசூர் அருகே நடந்த போராட்டத்தின் போது பேருந்துகள் மீது கல்வீசி தாக்கிய வழக்கில், சென்னை சிறப்பு நீதிமன்றம் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனால் அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை இழந்த பாலகிருஷ்ண ரெட்டி, சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்துச் செய்யக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, சிறப்பு நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்கவோ, நிறுத்தி வைக்கவோ முடியாது எனக்கூறி இடைக்கால மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். அதன் பின் சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ணா ரெட்டி, உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்திவைப்பதாக உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு தடையில்லை என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
தண்டனையை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ணா ரெட்டி மனுத்தாக்கல் செய்த நிலையில், தண்டனையை உச்சநீதிமன்றம் தற்போது நிறுத்தி மட்டுமே வைத்துள்ளது. அதாவது இந்த வழக்கு தொடர்பான நீதிமன்றத்தின் அடுத்த உத்தரவு வரை பாலகிருஷ்ண ரெட்டி சிறைக்குச் செல்ல தேவையில்லை. வழக்கு தொடர்பான விசாரணைக்கு தடையில்லை என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதால் வழக்கு தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.