ஓபிஎஸ்ஸிடம் அடுக்கடுக்கான கேள்விகள்; முடிந்தது அதிமுக பொதுக்குழு வழக்கு - தீர்ப்பு?

ஓபிஎஸ்ஸிடம் அடுக்கடுக்கான கேள்விகள்; முடிந்தது அதிமுக பொதுக்குழு வழக்கு - தீர்ப்பு?
ஓபிஎஸ்ஸிடம் அடுக்கடுக்கான கேள்விகள்; முடிந்தது அதிமுக பொதுக்குழு வழக்கு - தீர்ப்பு?

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததையடுத்து தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

அதிமுக பொதுக்குழு கூடியதற்கு எதிராகவும் அதில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு எதிராகவும் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி, ரிஷிகேஷ் ராய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது. இன்று (ஜனவரி 11) 5வது நாள் விசாரணையின்போது அதிமுக தலைமை அலுவலகம் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

அதிமுக தலைமை அலுவலகம் வைத்த வாதம்!

”கட்சியின் விதிகள் எந்த ஒரு இடத்திலும் மீறப்படவில்லை. நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் கட்சியின் செயல்பாடுகள் முடங்கிப்போய் உள்ளது. நிர்வாக ரீதியிலான சிக்கல்களை ஏற்படுத்துவதாகவே இந்த வழக்குகள் உள்ளன. அதிமுக கட்சி அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் நுழைந்து அங்கு உள்ள பொருட்களை சேதப்படுத்தியும் ஆவணங்களை கொள்ளையடித்தும் சென்றது தொடர்பாக அங்கு நடத்தப்பட்ட கலவரத்தின்போது அதனை கண்காணிக்க அப்பகுதி மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்துதான் அதிமுக கட்சி அலுவலகத்திற்கு அப்போது சென்ற வருவாய்த் துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். இந்த விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே நீதிமன்றத்திலும், இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திலும் தவறான தகவல்களை ஓபிஎஸ் கொடுத்து வருகிறார்” என அதிமுக அலுவலகம் சார்பில் வாதம் வைக்கப்பட்டது.

மீண்டும் ஓபிஎஸ் தரப்பு வாதம்!

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “ஓபிஎஸ்ஸை நீக்க வேண்டும் என்பது அதிமுக பொதுக் குழுவின் அஜெண்டாவில் ஒன்றாக இல்லை. பின் அதனை எப்படிச் செய்தீர்கள் என்பதுதான் தற்போதைய ஒரே கேள்வி” எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு அதிமுக அவைத் தலைவர் சார்பில் பதிலளித்த மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ”அதிமுகவின் சுப்ரீம் அதிகாரங்களைக் கொண்ட ஒரு அமைப்புதான் அதிமுக பொதுக்குழு. எனவே, அதற்கு அனைத்து அதிகாரங்களும் உண்டு” என்றார். அனைத்து தரப்பு வாதங்களும் உச்ச நீதிமன்றத்தில் நிறைவு பெற்றதையடுத்து, அதற்குப் பதில் வாதம் வைத்த ஓபிஎஸ் தரப்பு, “அதிமுகவில் இல்லாத இரண்டு பதவிகளை உருவாக்க வேண்டும் என்று கேட்டதே இவர்கள்தான். உருவாக்கியதற்குப் பிறகு அனைத்து நடவடிக்கைகளும் முறையாகச் சென்று கொண்டிருந்தபோது திடீரென குழப்பங்களை விளைவிக்கும் வகையில் அந்த இரண்டு பதவிகளும் நீக்கப்பட வேண்டும் என்று சொல்வதும் இவர்கள்தான்.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரண்டு பதவிகளும் காலியாகும்போது அடுத்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்படும்வரை ஏற்கெனவே இருந்தவர்களால் நியமிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து கட்சியை நடத்தப்பட வேண்டும் என்றும் தேர்தல் நடத்தப்பட்டு இரண்டு பதவிகளும் நிரப்பப்பட வேண்டும் என்பதும் அதிமுகவின் விதிமுறை. அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரண்டு பதவிகளும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட இருந்தது. தேர்தலில் மற்ற யாரும் போட்டியிடவில்லை என்பதால் நேரடியாக அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ஜூலை மாதம் நடைபெற்ற பொதுக்குழு முடிவுகளை எப்படி எதிர்க்க முடியும் என இவர்கள் கேட்கிறார்கள். அந்த விவகாரம் அனைத்தும் காலாவதியாகிவிட்டது என இவர்கள் சொல்கிறார்கள். அதை நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் அதிலிருந்துதான் அனைத்து பிரச்சினைகளும் தொடங்கியது. பொதுக்குழு கூட்டுவது தொடர்பான நோட்டீஸை முன்கூட்டியே வழங்கவில்லை.

ஓபிஎஸ்ஸிடம் தரப்பிடம் தொடர்ந்து கேள்வி!

வழங்கப்பட்ட நோட்டீஸிலும் இடம்பெறாத விஷயங்களை எல்லாம் அதிமுக பொதுக் குழுவில் இவர்கள் கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறார்கள். இதற்கு முன்பு கூட்டப்பட்டுள்ள பொதுக்குழு நோட்டீஸ்கள் எல்லாம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. அவற்றை ஒப்பிட்டுப் பார்த்தாலே உங்களுக்குத் தெரியும். அன்று கூட்டப்பட்ட பொதுக்குழு சட்டவிரோதம். மேலும், அடிப்படை உறுப்பினர்களால்தான் உயர்மட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதே எக்காலத்திலும் மாற்ற முடியாத விதிமுறை” என வாதம் வைத்தனர்.

அப்போது, ”ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரண்டு பதவிகள் இருக்கிறது. இந்த இரண்டில் ஒரு பதவியில் இருப்பவர்கள் அந்தப் பதவியில் தொடர விருப்பமில்லை அல்லது அவர் அந்தப் பதவியில் தொடர்வதால் கட்சிக்கு பாதகம் ஏற்படுகிறது அல்லது அந்தப் பதவியில் இருப்பதற்கு தகுதி இல்லை என நிலை உருவாகிறது என்றால் அப்போது என்ன செய்வீர்கள்” ஓபிஎஸ் தரப்பிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
”காலியாகக்கூடிய இடத்திற்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரண்டு பதவிகளுக்கும் ஒரே நேரத்தில்தான் தேர்தல் நடத்தப்பட வேண்டும்” எனவும் ஓபிஎஸ் தரப்பு பதில் அளிக்கப்பட்டது. “தொடர்ந்து உங்கள் கட்சி விவகாரம் நீதிமன்றங்களிலேயே இருப்பதாக இருந்தால் கட்சியின் செயல்பாடுகளை எவ்வாறு நிர்வகிப்பீர்கள்” என நீதிபதிகள் கேள்வி எழுப்பியதோடு, ”ஜூன் 23ஆம் தேதி நடத்திய கூட்டம் சரியானதுதானா” என நீதிபதிகள் வினவினர்.

வழக்கு ஒத்திவைப்பு!

”கூட்டப்பட்ட கூட்டம், ஓர் அளவுக்கு சரியானதுதான் என்றாலும்கூட, அதில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், கையாளப்பட்ட வழிமுறைகள் என அனைத்தும் தவறானது” என ஓபிஎஸ் தரப்பு வாதம் வைத்தது. அதற்கு நீதிபதிகள், “அப்படி என்றால் அதிலிருந்துதான் எல்லா பிரச்சனையும் தொடங்கியதா” என மீண்டும் கேள்வி எழுப்பினர். அதற்கு, “ஆம்” என ஓபிஎஸ் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததையடுத்து, தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. மேலும் வரும் 16ஆம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முன்னதாக நடந்த விசாரணையின்போது ஓபிஎஸ் தரப்பு, “பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் கொண்டுவர முயல்வது அதிமுகவின் சட்ட விதிகளுக்கு முரணானது” என்றும், ஈபிஎஸ் தரப்பு, “ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்க அதிமுக பொதுக்குழுவுக்கு அதிகாரம் உண்டு” எனவும் வாதம் வைக்கப்படிருந்தது குறிப்பிடத்தக்கது.

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com