காதலிக்க மறுத்த மாணவிக்கு மாணவன் செய்த கொடூரம்
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி மீது சக மாணவர் கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் ஆத்திவிளை பகுதியை சேர்ந்தவர் சுவாமிதாஸ். இவரது மகள் சஜினா. இவர் குளச்சலில் உள்ள லெட்சுமிபுரம் கலைக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு தமிழ் இலக்கிய பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இவரை அதேக்கல்லூரியில் மூன்றாமாண்டு பயின்று வரும் வெள்ளிச்சந்தை பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் விக்னேஷ் என்பவர் ஒருதலை பட்சமாக காதலித்து வந்ததாக தெரிகிறது. மாணவி சஜினா இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடமும் முறையிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால் விரக்தியடைந்த வாலிபர் விக்னேஷ் நேற்று கல்லூரி முடிந்து வீட்டிற்கு செல்ல பஸ் நிறுத்தத்தில் சஜினா நின்று கொண்டிருந்தபோது, விக்னேஷ் மற்றும் அவரது நண்பர்கள் சுதன், ராஜாசிங் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் வந்து என்னை காதலிக்காத நீயெல்லாம் இருந்து என்னபயன் என்று கூறி தனது முழங்கையால் மாணவியின் மார்பில் இடித்துள்ளார். இதில் சஜினா நிலை தடுமாறி கீழே விழவே, உடன் வந்த தோழி நதியா அவர்களை பிடிக்க முயன்ற போது அவரையும் தாக்கியுள்ளார். இதில் இருவரும் படுகாயமடைந்தனர். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வரும் முன் அந்த மூவரும் வண்டியை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடினர்.
படுகாயமடைந்த மாணவிகளை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதில் சஜினா நுரையீரல் பாதிப்படைந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து புகாரின் அடிபடையில் குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் அந்த மூவர் மீதும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து வலைவீசி தேடிவருகின்றனர். இது குறித்து குளச்சல் உட்கோட்ட டி.எஸ்.பி வினோஜ் கல்லூரி மற்றும் சம்பவ இடத்தில் இன்று நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.