1966 முதல் 2023 வரை.. தமிழ்நாட்டை இதுவரை தாக்கிய புயல்களும், அதன் பாதிப்புகளும்! வரலாறு சொல்வதென்ன?

மிக்ஜாம் புயலால் சென்னை தண்ணீரில் மிதந்து வரும் இந்நேரத்தில் இது வரை தமிழ்நாடு சந்தித்த புயல்கள் என்னென்ன? பாதிப்புகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
புயல்
புயல் வலைதளாம்

மிக்ஜாம் புயலால் சென்னை தண்ணீரில் மிதந்து வரும் இந்நேரத்தில் இது வரை தமிழ்நாடு சந்தித்த புயல்கள் என்னென்ன? பாதிப்புகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

இதுவரை தமிழகத்தை பல புயல்கள் தாக்கியிருந்தாலும் 2005 பிறகு தான் புயலுக்கு பெயர்வைக்கப்பட்டு கவனத்தில் கொள்ளப்பட்டது.

முன்பாக 1966 ஆம் ஆண்டு பெயர் வைக்கப்படாத புயல் ஒன்று நாகப்பட்டினம் அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில், புயல் வடக்கு நோக்கு நகர்ந்து சென்னையில் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கரையை கடந்தது. இதனால் குறைந்தபட்சம் 6 கப்பல்கள் சேதம் அடைந்தன. அதில் ஒன்றான லைபீரியா கொடியுடன் வந்த சரக்கு கப்பலான 'ஸ்டமாட்டிஸ்', என்ற கப்பல் மெரினா கரையில் தரை தட்டி, மண்ணுக்குள் புதைந்து, 1990ஆம் ஆண்டுவரை அகற்றப்படாமல் மெரினா கடற்கரையிலேயே நிலைக்கொண்டிருந்தது.

'ஸ்டமாட்டிஸ்' கப்பல்
'ஸ்டமாட்டிஸ்' கப்பல்வலைதளம்

அடுத்ததாக, 1977-ம் ஆண்டு ஒரு பெரும் புயல் ஒன்று தமிழகத்தில் நாகப்பட்டிணம் பகுதியை தாக்கியது. இந்தப் புயல் திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டத்தில் பலத்த பாதிப்பை ஏற்படுத்தியதுடன், நாகை ரயில் நிலையத்தை மிக மோசமாத் தாக்கியது. அடுத்து, 1985-ம் ஆண்டில் ஒரு புயல் தமிழகத்தைத் தாக்கி உள்ளது. இதன் பிறகு தமிழகத்தை நோக்கி வந்த பெரும்பாலான புயல்கள் அனைத்தும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி தமிழகத்தில் கரையை கடந்த போதிலும் அதிக அளவு புயல்கள் ஆந்திராவில் தான் கரையை கடந்ததுள்ளது.

1998-ல் உருவான புயல் அதிக அளவில், அதாவது சராசரியை விட 30 விழுக்காடு கூடுதலான மழையைக் கொட்டித் தீர்த்தது.

பியார், பாஸ், ஃபர்னூஸ் புயல் புயல்கள் (2005)

பியார், பாஸ், ஃபர்னூஸ் என்ற மூன்று புயல்கள் கடந்த 2005-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் அடுத்தடுத்து வங்கக் கடலில் உருவானது. இதில், டிசம்பர் முதல் வாரத்தில் உருவான ஃபர்னூஸ் புயல் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. வேதாரண்யம் அருகே இப்புயல் கரையை கடந்தது. இப்புயல் காரணமாக சுமார் 25 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டனர். இருப்பினும், மாநிலம் முழுவதும் கடுமையான பயிர் சேதம் ஏற்பட்டது. கடலூர், சிதம்பரம் பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் மிகுந்த சிரமமடைந்தனர். 2005-ம் ஆண்டு மொத்தமாக 773 மில்லி மீட்டர் பெய்த மழையால் தமிழகமே வெள்ளக்காடானது. நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிந்து பலகோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.

நிஷா புயல் (2008)

2008-ம் ஆண்டு நவம்பர் 24-ம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி புயலாக உருமாறியது. சுமார் 22 ஆண்டுகளுக்குப் பிறகு வங்கக் கடலில் உருவான மிகப்பெரிய புயலென்று வானிலை ஆய்வாளர்கள் இதை தெரிவித்தனர். இந்த புயலால் தமிழகத்தில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 189 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக ஒரத்தநாடு , தஞ்சாவூர் மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் 660 மி.மீ.க்கு மேல் மழையும் 20 நாட்களுக்கு மேல் கனமழை பெய்தது, சுமார் 12 மாவட்டங்கள் கடும் பாதிப்பிற்கு ஆளாக்கியது. 170-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். 2,500-க்கும் மேற்பட்ட கால்நடைகளும் பலியாயின. 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.

ஜல் புயல் (2010)

2010-ம் ஆண்டு தென் சீனக் கடலில் உருவான ஜல் புயல், இந்தியப் பெருங்கடல் பக்கம் நகர்ந்து வந்து நவம்பர் 6-ம் தேதி 111 கி.மீ வேகத்தில் சென்னையைக் கடந்து சென்றது. இந்தப் புயலின் தாக்கத்தினால் 50-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 70,000-க்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். சென்னையில் தரையிறங்க வேண்டிய 16-க்கும் மேற்பட்ட விமானங்கள் பாதுகாப்பு கருதி பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன . இப்புயலால் சுமார் 300 ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்கள் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இப்புயல் இலங்கையிலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது.

தானே புயல் (2011)

தானே புயல் 2011 ஆண்டில் வங்கக் கடலில் உருவான அதி தீவிரப் புயல். வங்கக் கடலில் தென் கிழக்குத் திசையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகி மெல்ல மெல்ல வலுவடைந்து புயலாக மாறியது. இந்த புயலுக்கு 'தானே' என்று பெயரிடப்பட்டது.

இது, புதுச்சேரிக்கும் கடலூருக்கும் இடையே இடையே கரையைக் கடந்தது. இதனால், புதுச்சேரி, கடலூர் பகுதியிலும் பலத்த சேதம் ஏற்பட்டது. இந்த புயலினால், 45-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நாசமாகின, எண்ணற்ற வீடுகள் சேதமாகின. பலரின் வாழ்வாதாரத்தை முற்றிலும் அழித்துச் சென்றது இந்தப் புயல்.

நீலம் புயல் (2012)

நிலம் புயல் அல்லது நீலம் புயல் என்பது இதன் பெயர். 2012 ஆண்டில் வங்கக் கடலில் உருவான இரண்டாவது அதி தீவிர இப்புயலானது, முதலில் வங்கக் கடலில், தென் கிழக்கு பகுதியில் அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாகி சென்னைக்கு அருகில், 550 கி.மீ., தொலைவில் நிலை கொண்டிருந்தது பின், படிப்படியாக தொடர்ந்து வலுவடைந்து, அதிதீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி புயலாக மாறியது. இப்புயலால் பல நகரங்களில் கடல் நீர் ஊருக்குள் புகுந்தது. 20-க்கும் அதிகமான மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. அதிகமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

மடி புயல் (2013)

தென்மேற்கு வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஒரே இடத்தில் நிலை கொண்டு பின்பு புயலாக மாறியது. இப்புயல் வேதாரண்யம் அருகே கரையைக் கடந்தது. ஆனாலும் பெரிய அளாவிலான பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை.

ரோனு, கியான்ட், நடா, வர்தா புயல் (2016)

2016 ஆண்டு 4 புயல்கள் உருவானாலும், வர்தா புயல் டிசம்பர் 12 ஆம் தேதி சென்னைக்கு அருகே கரையைக் கடந்து, டிசம்பர் 13 ஆம் தேதி கர்நாடக மாநில நிலப் பரப்பைத் தாண்டி அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வலுவிழந்தது.

மலேசியத் தீபகற்பத்தின் அருகே குறைந்த காற்றழுத்த மண்டலமாக உருவாகிய இப்புயலனது, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய புயலாக வலுப்பெற்றது. பிறகு வலுவிழந்து சென்னைக்கு அருகே கரையைக் கடந்தது.

இதே ஆண்டில் உருவான ரோனு, கியான்ட், நடா புயல்களால் எந்தப் பாதிப்பும் இல்லை என்றாலும், வர்தா புயல் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. பல்லாயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல்லாயிரக்கணக்கான மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. 15-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமான சேதம் ஏற்பட்டது. மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. போக்குவரத்து முடங்கிய நிலையில், சென்னை மாநகரமே ஸ்தம்பித்தது.

ஒக்கி புயல் (2017)

வடக்கு இந்தியப் பெருங்கடலில் இலங்கைக்கு அருகில் உருவான இப்புயல் இலங்கையில் சேதம் ஏற்படுத்திய பிறகு, இலட்சத்தீவுகளை கடந்து இந்திய நிலப்பகுதியை நோக்கி நகரத் தொடங்கியது. இந்தியாவில் கன்னியாகுமரி அருகே நெருங்கும் போது, ஒக்கி தன் பாதையை மாற்றிக்கொண்டு, இலட்சத்தீவை நோக்கிச் செல்லும் போது தீவிரமடைந்து குஜராத்தைக் கடந்தது. தமிழகத்தை கடுமையாக தாக்கிய இப்புயலால் 218 பேர் உயிரிழந்துள்ளனர். தவிர, எண்ணற்ற மரங்கள், பயிர்களுக்கு சேதம் விளைவித்ததுடன், கன்னியாகுமரியை தனிமைப்படுத்தியது. 600க்கு மேற்பட்டவர்கள் காணாமல் போயினர். இந்த புயல் பாதிப்பிலிருந்து மக்கள் வெளியே வர அதிகநாட்கள் ஆகியது.

கஜா புயல் (2018)

வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் வங்கக் கடலில் உருவாகியது. இந்தப் புயலால் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. 40 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கான கால்நடைகள், பறவைகள் உயிரினங்கள் உயிரிழந்தன. லட்சக்கணக்கான மரங்கள் வீழ்ந்தன. 2.5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர். இந்த ஒரு புயல் பலரின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக அழித்தது. பலத்த சேதத்தை ஏற்படுத்திய கஜா புயலின் தாக்கத்திலிருந்து மக்கள் இன்னும் மீளவில்லை.

நிவர் புயல், புரேவி புயல் 2020

புரேவி புயல். இது தென்கிழக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உறுவாகி பிறகு புயலாக மாறியது. இப்புயலானது பாண்டிச்சேரிக்கும் சென்னைக்கும் இடையே கரையை கடந்தது. ஆனாலும் பாதிப்பு ஏதும் அதிகமாக இல்லை. அதே வருடத்தில் உருவான மற்றொரு புயலான நிவர் புயல் இலங்கையை கடந்து தென் தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைநின்று பின் கனத்த மழையுடன் கரையை கடந்தது.

மாண்டஸ் புயல் 2022

தென்கிழக்கு மண்டலத்தில் உறுவாகி பிறகு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பிறகு புயலாக உறுவானது. பிறகு வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாக கரையை கடந்தது இதில் 4 பேர் உயிரிழந்தனர்.

மிக்ஜாம் புயல் 2023

இப்புயல் வங்ககடலில் காற்றழுத்த தாழ்வுமண்டலமாக உருவாகி, பின் புயலாக வலுப்பெற்று சென்னைக்கு மிக அருகே பயணித்து ஆந்திரமாநிலம் மசூலிபட்டிணம் அருகே கரையைக்கடந்தது. இப்புயலால் கடந்த 47 வருடங்களில் இல்லாத அளவிற்கு அதிக மழையை கொடுத்துள்ளது. இதன் பாதிப்பு அதிகமாக இருந்தாலும் இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை இன்று வரை 17 ஆக உள்ளதென்று தகவல் வெளியாகி உள்ளது.

இதுவரை 1984 லிருந்து 2005 வரை சென்னையில் பெய்த மழையின் அளவு என்ன என்பதை தமிழ்நாடு வெதர்மேன் தனது X பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com