சென்னையில் புயல் கரையைக் கடக்கும் இடம் என்ன? பிரதீப் ஜான் முக்கியத் தகவல்
பரங்கிப்பேட்டைக்கும் சென்னைக்கும் இடையே புயல் கரையைக் கடக்கும் என சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி சென்னையில் டிசம்பர் 2 ஆம் தேதி வரை மழை நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் புயலாக மாறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தான் சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் இன்று மாலைக்குள் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். அதேசமயத்தில் வங்கக்கடலில் உருவாக உள்ள ஃபெங்கல் புயல் கரையைக் கடக்கும் முன்னரே வலுவிழக்க வாய்ப்பு இருப்பதாகவும் ஏற்கனவே கணிக்கப்பட்டிருந்தது. ஃபெங்கல் புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதற்கான காரணம் குறித்து விளக்கம் அளிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் புயல் உருவாகும் நேரம் குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ, தாழ்வு மண்டலமாகவோ அல்லது புயலாகவோ பரங்கிப்பேட்டைக்கும் சென்னைக்கும் இடையே 30 ஆம் தேதி கரையைக் கடப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. சென்னை முழுவதும் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் கனமழை இருக்கும். 27 ஆம் தேதி லேசான முதல் மிதமான மழையும், 28 மிதமான மழையும், 29 ஆம் தேதி கனமழையும், 30 ஆம் தேதி மிக கனமழையில் இருந்து அதி கனமழை வரை எதிர்பார்க்கலாம். டிசம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. நிலப்பகுதியை நோக்கி நகர்ந்த பிறகும் கூட கொங்கு மண்டலங்களில் மழைப் பொழிவிற்கான வாய்ப்பு இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால், வானிலை ஆய்வு மையம் சார்பில் இந்த இடத்தில்தான் புயல் கரையைக் கடக்கும் என எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.