சத்தியமங்கலத்தில் சாலையை மறித்து நின்ற ஒற்றை காட்டு யானை - மிரண்டுபோன வாகன ஓட்டிகள்

சத்தியமங்கலத்தில் சாலையை மறித்து நின்ற ஒற்றை காட்டு யானை - மிரண்டுபோன வாகன ஓட்டிகள்
சத்தியமங்கலத்தில் சாலையை மறித்து நின்ற ஒற்றை காட்டு யானை - மிரண்டுபோன வாகன ஓட்டிகள்

சத்தியமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஒற்றை யானை வாகனங்களை வழிமறித்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை போன்ற பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழகம் கர்நாடகம் மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

இச்சாலை வழியாக இரு மாநிலங்களுக்கிடையே 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக வனப்பகுதியில் மழை பெய்யாததால் தற்போது கடுமையான வறட்சி நிலவுகிறது. இதனால் யானை உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு தீவனம் மற்றும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் தற்போது காட்டு யானைகள் ஆசனூர் அருகே சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் சுற்றித்திரிவதோடு அவ்வப்போது பகல் நேரங்களில் காட்டு யானைகள் சாலையை கடந்து செல்கின்றன. இந்நிலையில், இன்று ஆசனூர் அருகே வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை தேசிய நெடுஞ்சாலையில் சுற்றித் திரிந்ததோடு சாலையின் நடுவே சிறிது நேரம் நின்றதால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் யானையைக் கண்டு வாகனங்களை நிறுத்தினர்.

இந்நிலையில், யானை சிறிது நேரம் நகராமல் அங்கேயே நின்றதால் அச்சமடைந்த வாகன ஓட்டிகள் யானை வனப்பகுதிக்குள் சென்ற பின் புறப்பட்டுச் சென்றனர். யானை சாலையில் நின்றதால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த வனத்துறையினர் வாகன ஓட்டிகளிடம் யானை நடமாடுவதால் மிகுந்த எச்சரிக்கையோடு வாகனங்களை இயக்குமாறு அறிவுறுத்தினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com