ஓரினச்சேர்க்கைக்கு ஆசைக்காட்டி அழைத்து இளைஞர்களிடம் நகை பறித்ததாக கேரள வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலம் இளைஞர்களை ஓரினச் சேர்க்கைக்கு அழைக்கும் கும்பல், அவர்களிடம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவதாக காவல்நிலையத்திற்கு புகார்கள் வந்தன. புகார் அளித்தவர்கள் கொடுத்த தகவல் மற்றும் ஹோட்டல்களில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளில் உள்ள நபரின் உருவத்தை வைத்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் மண்ணடியில் உள்ள லாட்ஜில் தங்கியிருந்த கேரள மாநிலத்தை சேர்ந்த சுமேஷ், என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன, செல்போன் ஆப் மூலம் ஓரின சேர்க்கையாளர்களின் எண்களை கண்டுபிடித்து அவர்களின் வாட்ஸ் ஆப்புக்கு அவர்களை கவரும் விதமாக மெசேஜ் அனுப்புவார்கள். பின்னர் இருவரும் ஓரின சேர்க்கைக்கு சம்மதம் தெரிவித்த பின்பு தனியார் ஹோட்டலில் அறை எடுப்பார்கள். அனைத்தும் முடிந்த நிலையில் வந்த நபர் நகை அணிந்து இருந்தால் இறுதியில் கூல்டிரிங்சில் மயக்க மாத்திரை கலந்து கொடுத்து விடுவார். அந்த நபர் மயங்கிய பிறகு அவர் அணிந்திருக்கும் நகைகளை பறித்து கொண்டு சென்று விடுவார்கள். இதில் நகைகள் அணிந்து வராத நபர்களை ஆரம்பத்திலேயே நிராகரித்து விடுவார்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சுமேஷிடம் இருந்து 5பவுன் நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.