உ.பி.க்கு நடந்தே புறப்பட்ட இளைஞர்கள் - தடுத்து நிறுத்திய வருவாய்த் துறையினர்
தமிழகத்திலிருந்து உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு நடந்தே செல்ல முயன்ற இளைஞர்களை வருவாய்த்துறையினர் தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர்.
வேலூர் மாவட்டம் அரக்கோணம், தக்கோலம், குருவராஜப்பேட்டை, தணிகை போளூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலை ஓரங்களில் தள்ளுவண்டி மூலமாக சாத்துக்குடி ஜூஸ் விற்பனை செய்து வந்த வெளிமாநிலத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அரக்கோணம் வின்டர் பேட்டை பகுதியில் வீடு எடுத்து தங்கியிருந்தனர். இவர்கள் கடந்த 45 நாட்களாக 144 தடை உத்தரவால் போதிய வருமானமும் உணவும் இன்றி தவித்து வந்துள்ளனர்.
இதனால் இவர்கள் உத்தரபிரதேச மாநிலத்திற்கு சாலை மார்க்கமாக நடந்து செல்ல முடிவெடுத்தனர். அதன்படி அரக்கோணத்திலிருந்து திருத்தணி வழியாக நடந்து சென்றபோது வருவாய்த்துறையினர் தடுத்து நிறுத்தி அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் தற்போது மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பெயரில் இவர்களை சொந்த மாநிலத்திற்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை வருவாய்த் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
வருவாய்த்துறையினர் அரக்கோணம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வடமாநில இளைஞர்களை உரிய நேரத்தில் கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டு போதிய உணவு ஏற்பாடு செய்து இருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது என புகார் எழுந்துள்ளது.

