திமுக வைத்த நிலுவைத் தொகையே கட்டண உயர்வுக்கு காரணம்: அமைச்சர் வேலுமணி
திமுக ஆட்சி காலத்தில் வைத்து போன நிலுவைத் தொகையை போக்குவரத்து பணியாளர்களுக்கு கொடுக்கவே கட்டண உயர்வு கொண்டு வந்து இருப்பதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் வையம்பாளையத்தில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவிற்கு ஒரு கோடியே பதினேழு லட்சத்தில் மணிமண்டபம் கட்டும் பணியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் ,விவசாய சங்கத்தினர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, திமுக தொழிற்சங்கத்தினர் போக்குவரத்து துறையில் நெருக்கடியை உருவாக்கியதாக கூறினார். திமுக ஆட்சியில் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களின் நிதி வேறு ஒரு திட்டத்தில் பயன்படுத்தபட்டதால், இது வரை ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு நிலுவைத் தொகை கொடுக்க முடியாமல் உள்ளதாக கூறினார்.மேலும் திமுக ஆட்சி காலத்தில் வைத்து போன நிலுவைத் தொகையை, போக்குவரத்து பணியாளர்களுக்கு கொடுக்கவே கட்டண உயர்வு கொண்டு வந்து இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். இந்தக் கட்டண உயர்வு மற்ற மாநிலங்களை விட குறைவு எனவும் கூறினார்.