கனமழையால் ஏலக்காய் செடிகள் அழிந்ததாலும் வரத்து குறைந்ததாலும் ஏலக்காய் விலை அதிகரித்துள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக பெய்த கன மழையால் ஏலக்காய் செடிகள் சேதமடைந்தன. அழுகல் நோயால் பெரும்பாலான தோட்டங்களில் செடிகள் அழிந்தன. இதனால் ஏலக்காய் வரத்து குறைந்து, ஒரு கிலோ ஏலக்காய் இரண்டாயிரம் ரூபாயை தாண்டி விலையேற்றம் கண்டுள்ளது.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கடந்த சில மாதங்களாக கனமழையாக பெய்தது. இதனால் இடுக்கி மாவட்ட பிரதான தொழிலான விவசாயமும் முற்றிலும் பாதிக்கப்பட்டது. குமுளி துவங்கி ஆனவிலாசம்,சக்குபள்ளம்,சாஸ்தாநடை,வண்டன்மேடு,புளியமலை,சாந்தம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் 11,340 ஹெக்டேர் பரப்பில் பயிர்கள் சேதமடைந்துள்ளதாகவும், அதில் 70 சதவீதம் ஏலச்செடிகள் எனவும் இதனால் 62 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கணக்கெடுப்பில் தெரிய வந்தது.
ஏலக்காய் செடிகள் அழிவால் தென்மேற்கு பருவமழைக்காலத்தின் வழக்கமான ஏலக்காய் வரத்தும் குறைந்துள்ளது. இதனால் ஏலக்காய் விலை படிப்படியாக அதிகரித்து வருகிறது. மத்திய அரசின் “ஸ்பைசஸ் போர்ட் ஆஃப் இண்டியா” எனும் நறுமணப்பொருள் வாரியம் சார்பில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் புத்தடியிலும், தேனி மாவட்டம் போடியிலும் ஏலக்காய் ஏலம் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.