ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்க சென்றவரை போலீசார் தாக்கியதாக புகார்
ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய தனியார் பள்ளி ஆசிரியர் காவல்துறையினரால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று நாடு முழுவதும் சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு தமிழகத்திலும் கடைப்பிடிக்கப்பட்டது.இதனால் பேருந்துகள், உணவகங்கள், ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் இன்று பல இடங்களில் ஆதரவற்றோர்கள் பலர் உணவின்றி தவித்தனர்.
இதனையடுத்து அவர்களுக்கு சில தொண்டு அமைப்புகள் உதவும் வகையில், உணவு பொட்டலங்களை வழங்கினர். அதேபோல தஞ்சாவூரில் உள்ள பேராவூரணி பேருந்து நிலையத்தில் உணவு இல்லாமல் ஆதரவற்ற சிலர் தவித்து வந்துள்ளனர். இந்தச் செய்தியைக் கேட்ட தனியார் பள்ளி ஆசிரியர் உதயகுமார், தனது இல்லத்தில் உணவு தயாரித்து நண்பர் ஒருவர் உதவியுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு கொண்டு சென்று கொடுத்துள்ளார்.
இதனையடுத்து உணவு கொடுத்துவிட்டு வீடு திரும்பும் போது, காவல்துறையினருக்கும் உதயகுமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் காவல்துறையினரின் தலைக்கவசத்தால் உதயகுமாரை தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நடந்த வாக்குவாதத்தில் காவல் உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசு மீண்டும் உதயகுமாரை தாக்கியதாக சொல்லப்படுகிறது.
இதுதொடர்பாக வட்டாட்சியரிடம் நாம் கேட்டபோது, சுய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் யாரும் வெளியே வருவதற்கு அனுமதி இல்லை என்றும் நூறு சதவிகித அமைதியான முறையில் ஊரடங்கு நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

