கணவன் மனைவியாய் நடித்து வீடு புகுந்து திருட்டு ! இருவர் கைது
கணவன் மனைவி போல் சென்று பூட்டியிருக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து திருடி செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் அன்னூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பகல் நேரங்களில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதனை தொடர்ந்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் உத்தரவின் பேரில் கருமத்தம்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் தனிப்படை போலீஸார் அன்னூர் அவிநாசி ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த காரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது காரில் ஒரு பெண்ணும் ஆணும் இருந்தனர். அவர்களை விசாரித்த போது முன்னுக்கு பின் முரனாக பேசினர். இருவரையும் காவல்நிலையம் அழைத்து சென்று விசாரிக்கையில் அவர்கள் தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் என்றும் உடன் இருந்த பெண் அதே பகுதியை சேர்ந்த அவரது காதலி சுகன்யா என தெரியவந்தது.
Read Also -> அழகிரியின் அமைதிப் பேரணி - ஆதங்கம் வெளிவருமா ?
இதனை தொடர்ந்து அவர்களிடம் விசாரிக்கையில் பகல் நேரங்களில் கணவன் மனைவி போல் சென்று பூட்டியிருக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து திருடி செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். விசாரணையில் பிரவீன் குமாரும் சுகன்யாவும் ,ஏற்கெனவே திருமணமானவர்கள் என்பதும் இருவரும் தங்களது கணவன் மனைவிக்கு தெரியாமல் காதலித்து வந்ததோடு, ஆடம்பரமாக வாழ இருவரும் கணவன் மனைவி எனக் கூறி வீடு வாடகை பார்ப்பது போல்,சென்று கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டதும் தெரியவந்துள்ளது. இவர்களிடம் அன்னூர் பகுதியில் திருடப்பட்ட 25 பவுன் நகை மற்றும் திருடிய பணத்தில் வாங்கப்பட்ட காரை பறிமுதல் செய்தனர், மேலும் இருவரையும் கைது செய்து காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.