விசைப்படகு மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
ராமேஸ்வரம் அருகே நடுக்கடலில் விசைப்படகு மீனவர்கள் மீது நாட்டுப்படகு மீனவர்கள், பெட்ரோல் குண்டு வீசியதால் பதற்றம் நிலவுகிறது.
புதுமடம்-ஏர்வாடி கடற்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் அதிகாலையில் மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென நாட்டுப்படகுகளில் வந்த அடையாளம் தெரியாத சிலர், விசைப்படகு மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசினர். இதில் நிசார்கான், முகமது அபுபக்கர் ஆகிய மீனவர்கள் காயம் அடைந்தனர். செய்யது இப்ராகிம் என்பவரது படகிலிருந்த மீன்பிடி வலைகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. காயமடைந்த மீனவர்கள் இருவரும் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தடை செய்யப்பட்ட வலைகளை, விசைப்படகு மீனவர்கள் சிலர் பயன்படுத்துவதைக் கண்டித்து தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. பெட்ரோல் குண்டு தாக்குதலைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் விசைப்படகு மீனவர்கள் மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. இதையடுத்து கடலோர கிராமங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.