தற்கொலை செய்துகொண்ட நபர் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர் அல்ல – தமிழக அரசு தகவல்

தற்கொலை செய்துகொண்ட நபர் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர் அல்ல – தமிழக அரசு தகவல்
தற்கொலை செய்துகொண்ட நபர் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர் அல்ல – தமிழக அரசு தகவல்

உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வேல்முருகன் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவரல்ல என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பழங்குடியினர் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தும் அதை வழங்காமல் தங்களை அலைக்கழித்ததாகக் குற்றம் சாட்டி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள இலவச சட்ட உதவி மையம் அருகே காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் இரு நாட்களுக்கு முன்பு தீக்களித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. பொறுப்புத் தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில் பலியான வேல்முருகன் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்றும் பழங்குடியினர் சான்றிதழ் கோரி கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி அவர் அளித்த விண்ணப்பத்தின் அடிப்படையில் செப்டம்பர் 23 ஆம் தேதி கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அவர் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர் அல்ல என்று அவரது விண்ணப்பம் செப்டம்பர் 26 ஆம் தேதி நிராகரிக்கப்பட்டது.

தன்னுடைய சகோதரர் எனக் கூறி, பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த இளவரசன் என்பவரின் சான்றை தாக்கல் செய்திருக்கிறார் இளவரசனுக்கும், வேல்முருகனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து கள ஆய்வின்போது அண்டை வீட்டார்களிடமோ, தெருவில் வசிப்பவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டதா என்பது குறித்து மாவட்ட ஆட்சியரின் அறிக்கையில் எந்த தகவலும் இடம்பெறவில்லை எனக் கூறிய நீதிபதிகள், வேல்முருகன் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவரா என்பது குறித்து, மாவட்ட வருவாய் அதிகாரியை நியமித்து விசாரிக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர்.

மாவட்ட வருவாய் அதிகாரி, அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர், அண்டை வீட்டார்கள், வேல்முருகனின் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் விசாரணை நடத்த வேண்டும் எனவும், சகோதரர் எனக் கூறிய இளவரசனிடமும் விசாரணை நடத்தி இரு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com