திருச்சி: பட்டப்பகலில் புதிய லாரி கடத்தல்.. 60 கிமீ தூரம் துரத்தி மடக்கிப்பிடித்த போலீஸ்
திருச்சியில் பட்டப்பகலில் கடத்தப்பட்ட புதிய லாரியை சினிமா சேஸிங் காட்சிகளைப் போல 60 கிலோ மீட்டர் தூரம் துரத்திச் சென்று போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
திருச்சி மணப்பாறையில் உள்ள தனியார் அரிசி ஆலைக்குச் சொந்தமான லாரியை ஒருவர் திடீரென கடத்திச் சென்றார். இதனை கண்ட ஆலை பணியாளர்கள் உடனடியாக லாரி கடத்தப்பட்டதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். லாரி வரும் திசையை அறிந்த காவல்துறையினர் சாலையின் நடுவே தடுப்புகளை வைத்து மடக்கிப்பிடிக்க முயன்றனர். ஆனால் அந்தத் தடுப்புகளையெல்லாம் இடித்து தள்ளிவிட்டு லாரி மின்னல் வேகத்தில் பறந்தது.
இதனையடுத்து காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், உள்ளூர்காரர் ஆகிய மூன்று பேரும், மூன்று தனித்தனி கார்களில் துரத்தினர். சினிமா காட்சியை போன்று பரபரப்பான சேஸிங் காட்சிகளை போன்று சுமார் 60 கிலோ மீட்டர் தூரம் தூரத்திச் சென்று, அரியமங்கலம் பால்பண்ணை அருகே லாரியை மடக்கி சுற்றிவளைத்தனர்.
பின்னர் லாரியில் இருந்து கடத்தியரை வெளியே இழுத்து கைது செய்ய முயன்றபோது காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்பியோட முயற்சிக்கையில், பொதுமக்கள் உதவியுடன் துரத்திப் பிடிக்கப்பட்டார். விசாரணையில், லாரியைக் கடத்தியவர் திருச்சி அரியமங்கலம் காட்டூர் பகுதியைச் சேர்ந்த பிச்சுமணி என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.