அரசுப் பள்ளி வகுப்பறையில் மாணவியை தாக்கியதாக சக மாணவியின் தாய் மீது வழக்கு
அரசுப் பள்ளி வகுப்பறையில் ஐந்தாம் வகுப்பு மாணவியை அடித்து உதைத்ததாக மற்றொரு மாணவியின் தாய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் ஒன்றியம் வேடல் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகள் இடையே சிறு பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில், ஒரு மாணவி தன் தாய் மேகலாவிடம் இது குறித்து கூறியுள்ளார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த மேகலா நேற்று மாலை பள்ளியின் வகுப்பறைக்கு வந்து சம்பந்தப்பட்ட மாணவியை தலைமையாசிரியர் முன்னிலையிலேயே அடித்து உதைத்து காயப்படுத்தியுள்ளார்.
இதையடுத்து பயந்துபோன தலைமையாசிரியர் மற்றொரு நபர் உதவியுடன் அடிவாங்கிய மாணவியை அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். இதைத் தொடர்ந்து வீட்டிற்குச் சென்ற மாணவியின் உடல்நிலை மிகவும் மோசமானதால் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை செய்திருக்கிறார்கள்.
இந்நிலையில், நடந்ததை அறிந்த பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் கவிதா தன் மகள் கடுமையாக தாக்கப்பட்டது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மாகரல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் மாணவியை அடித்த மேகலா மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.