10 கோடிக்கு மேல் விற்பனை - களைகட்டிய குந்தாரப்பள்ளி ஆட்டு சந்தை
கிருஷ்ணகிரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற ஆட்டுச் சந்தையில், ஆடுகள் நல்ல விலை போனதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி அடுத்துள்ள குந்தாரப்பள்ளியில் நடைபெறும் கால்நடை விற்பனை சந்தை மிகவும் பிரபலம். மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதியிலிருந்து இங்கே விற்பனைக்காக கொண்டு வரும் கால்நடைகள் தரமாகவும் ஆரோக்கியத்துடனும் காணப்படுவதால் நல்ல வரவேற்பு உள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வரும் வியாபாரிகள் இங்கு கால்நடைகளை வாங்கி செல்கின்றனர்.
இந்நிலையில் இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆட்டு சந்தை நடந்தது. அதில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து வெள்ளாடு, செம்மறி ஆடு, குரும்பை ஆடுகள் என மொத்தம் 10 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் பலியிடுவது வழக்கம் என்பதால் இன்று நடைபெற்ற சந்தையில் இறைச்சிக்காக அதிகளவு ஆடுகள் விற்பனையானது.
இதில் ஒரு ஜோடி ஆடு, குறைந்தபட்சம் 12 ஆயிரம் ரூபாயிலிருந்து அதிகப்பட்சமாக 50 ஆயிரம் ரூபாய் வரை விலை போனது. இதனால் ஆடுகள் நல்ல விலை போனதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும் இன்று நடைபெற்ற சந்தையில் சுமார் 10 கோடி வரை வர்த்தகம் நடைபெற்று உள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.