நீதிமன்ற உத்தரவை பின்பற்ற தவறியதன் விளைவாக மதுரவாயல் வட்டாட்சியருக்கு எதிராக தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிந்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
சென்னை, ராமாபுரத்தில் உள்ள கலசத்தம்மன் கோவிலுக்கு, பொதுப் பாதையை ஆக்கிரமித்து மண்டபம் கட்டியுள்ளதாக கூறி, அறப்போர் இயக்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதோடு, சென்னை மாநகராட்சி அதிகாரிகள், அப்பகுதி வட்டாட்சியர், கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மனுதாரரான அறப்போர் இயக்கம் அடங்கிய குழுவினர் சம்மந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது சம்மந்தப்பட்ட ஆக்கிரமிப்பு இடத்தை ஆய்வு செய்தது தொடர்பாக மதுரவாயல் வட்டாட்சியர் சார்பில் அக்டோபார் 26 ம் தேதியிட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால்,அறிக்கையில் மனுதாரரான அறப்போர் இயக்கத்தின் பிரதிநிதிகள் இடம்பெற்றது குறித்த விபரங்கள் தெரிவிக்கப்படாமல் இருந்தது.
தொடர்புடைய செய்தி: அச்சுறுத்தும் லாக் அப் மரணங்கள் - அப்பாவி மக்களின் அழுகையும்; அசராத அரசும்!
இந்நிலையில், அறப்போர் இயக்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த மார்ச் மாதம் நடத்த ஆய்வில் தாங்கள் கலந்து கொண்டதாகவும்,
வட்டாட்சியர் அந்த அறிக்கையை மறைத்துவிட்டு, தங்களை அழைக்காமல் ஒரு ஆய்வை நடத்தி அந்த அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்தனர். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள்,நீதிமன்ற உத்தரவிட்டும் அதனை மீறி மனுதாரர் இல்லாமல் ஆய்வு நடத்திய அறிக்கையை தாக்கல் செய்ததற்காக மதுரவாயல் வாட்டாட்சியர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்து விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.