கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை முக்கிய கட்டத்தை எட்டியிருப்பதாக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு, விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முதல் நபரான சயான் மற்றும் இரண்டாவது நபரான வாளையாறு மனோஜ் ஆகியோர் ஆஜராகினர். மற்ற 8 பேர் கேரளாவில் இருப்பதால் விசாரணைக்கு ஆஜராகவில்லை. தனிப்படை காவல்துறையினர் 150பேரிடம் விசாரணை நடத்தி உள்ளதாகவும், விசாரணை முக்கியமான கட்டத்தை எட்டி இருப்பதால் மேலும் கால அவகாசம் தேவைப்படுவதாகவும், நீதிபதி சஞ்சை பாபாவிடம், அரசு வழக்கறிஞர்கள், தெரிவித்தனர்.
மேலும் வாளையாறு மனோஜ் தனது நிபந்தனை ஜாமீனில் தளர்வுகள் அளிக்க கோரி மனு தாக்கல் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், நிபந்தனைகளை தளர்த்தக் கூடாது என்றும் வாதிட்டனர். அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனோஜிற்கு நிபந்தனை ஜாமீனில் தளர்வு கோரிய மனு மீது, பின்னர் தீர்ப்பு அளிப்பதாக தெரிவித்தார். மேலும் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை ஜனவரி 28ஆம் தேதிக்கு, ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.