திருச்சி: சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள அகதிகள் மரக்கிளைகளில் நின்றுகொண்டு போராட்டம்

திருச்சி: சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள அகதிகள் மரக்கிளைகளில் நின்றுகொண்டு போராட்டம்
திருச்சி: சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள அகதிகள் மரக்கிளைகளில் நின்றுகொண்டு போராட்டம்

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளவர்கள், தங்களை விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தி, முகாமில் உள்ள மரத்தின் கிளைகளில் ஏறி நின்றுகொண்டு போராட்டம் நடத்திவருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சிறப்பு முகாமில் இலங்கையைச் சேர்ந்த 115 தமிழர்கள் உள்பட குற்ற வழக்குகளில் தொடர்புடைய 165 வெளிநாட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள 11 அகதிகளிடம், கடந்த மாதம் 20-ம் தேதி தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் 13 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவர்கள் வைத்திருந்த நகைகள், பணம், செல்ஃபோன், லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் பறிமுதல் செய்துவிட்டு சென்றனர்.

மேலும் அதற்கு அடுத்த நாள் பொருளாதார குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் 4 பேர், சிறப்பு முகாமில் உள்ள அந்த குறிப்பிட்ட 11 அகதிகளிடம் விசாரணை நடத்தினார்கள். அந்தப் பொருட்களை வாங்கியதற்கான பணம் எவ்வாறு வந்து சேர்ந்தது? அதற்கு முறையாக சரக்கு மற்றும் சேவை வரி (GST)செலுத்தப்பட்டுள்ளதா? என்கிற விவரங்களை கேட்டறிந்தனர்.

உரிய ஆவணங்களை சமர்ப்பித்தால் கையகப்படுத்தப்பட்ட பொருள்களை மீண்டும் ஒப்படைப்பதாக உறுதியளித்துவிட்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றுவிட்டனர். இந்நிலையில் கடந்த 19-ம் தேதி திருச்சி மாநகர போலீசார் அதிரடி சோதனை நடத்தி அகதிகளிடம் இருந்த 155 செல்ஃபோன்கள், 3 லேப்டாப், ஒரு ஸ்மார்ட் வாட்ஜ் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்களது உடைமைகளை போலீசார் உடனடியாக திருப்பி ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தியும், தங்களை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியும், 15-க்கும் மேற்பட்ட அகதிகள் மரக்கிளைகளில் நின்று கொண்டு, மதியம் 2 மணி முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com