ஆய்வாளர் பெரியபாண்டியன் உடனடியாக உயிரிழந்ததற்கு அவரின் நுரையீரலில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததே காரணம் என்று பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
சென்னை கொளத்தூர் நகைக்கடையில் நடைப்பெற்ற கொள்ளையில் தொடர்புடைய வடமாநில கொள்ளையர்களை தேடி, தமிழக காவல்துறையினர் ராஜஸ்தான் விரைந்தனர். அப்போது கொள்ளையர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் நடந்த மோதலில், நேற்று முன்தினம் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். வீரமரணம் அடைந்த பாண்டியன் உடலுக்கு முதலமைச்சர் உட்பட அனைவரும் அஞ்சலி செலுத்திய பின்னர், அவரின் சொந்த ஊரான நெல்லை மாவட்டம் மூவிருந்தாளி சாலைப்புதூருக்கு கொண்டு செல்லப்பட்டு காவல்துறையினரின் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், பெரியபாண்டியனின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது. ஜோத்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அவரின் உடலை பரிசோதனை செய்தனர். அதில், ஒரே ஒரு துப்பாக்கி குண்டு ஆய்வாளர் பெரியபாண்டியனின் இடது பக்க நுரையீரலில் பாய்ந்ததில், அவர் உடனடியாக இறந்ததாக அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இத்தகவலை ராஜஸ்தான் போலீஸார் உறுதிபடுத்தியுள்ளனர்.