தொடர் மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் வீட்டினுள் கட்டியிருந்த ஆறுஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்துள்ள அமராவதிபுதூர் கீழத் தெருவை சேர்ந்தவர் சொரணையா. விவசாயியான இவர், தனது மனைவி அழகம்மாளுடன் தங்களுக்குச் சொந்தமான ஓட்டு வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் புரெவி புயல் காரணமாக பெய்த தொடர் மழையால் இவர்களது வீடு சேதமடைந்து திடீரென இடிந்து விழுந்துள்ளது. வீடு இடியும் சத்தம் கேட்டு தம்பதியினர் உடனடியாக வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். ஆனால் வீட்டினுள் கட்டியிருந்த 6 ஆடுகள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தன. சம்பவம் குறித்து அமராவதிபுதூர் காவல்துறையினர் வழக்கு பதிந்து வருவாய் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
காரைக்குடி வட்டாட்சியர் ஜெயலட்சுமி சேதம் குறித்து ஆய்வு செய்து, அரசின் நிவாரணத் தொகை கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.