காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண் பெற்றோருடன் சென்றதால், மனமுடைந்த கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் நிகழ்ந்துள்ளது.
போத்தனூரைச் சேர்ந்த கோவிந்தராஜன் என்ற இளைஞருக்கும், அவர் காதலித்த பெண்ணுக்கும் கடந்த 1 ஆம் தேதி நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த பெண் வீட்டார் போத்தனூர் காவல்நிலையத்தில் முறையிட்டுள்ளனர். இருவீட்டார் மற்றும் மணமகன், மணமகளிடம் காவல்துறையினர் தனித்தனியாக பேசியபோது அந்த பெண் தனது பெற்றோருடன் செல்வதாகக் கூறியுள்ளார்.
இதையடுத்து, அந்த பெண்ணை அவரது பெற்றோர் அழைத்துச் சென்றனர். இதனால் மனமுடைந்த மணமகன் கோவிந்தராஜ், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மணமகள் தனது தாய் வீட்டிற்குச் சென்றதும், அவரது உறவினர்கள் கோவிந்தராஜை திட்டியதாக கூறப்படுகிறது.
கோவிந்தராஜின் உயிரிழப்புக்கு பெண் வீட்டாரும், காவல்துறையுமே காரணம் என மணமகனின் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.