“7 பேர் விடுதலையில் ஆளுநர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” : அற்புதம்மாள்

“7 பேர் விடுதலையில் ஆளுநர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” : அற்புதம்மாள்
“7 பேர் விடுதலையில் ஆளுநர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” : அற்புதம்மாள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக ஆளுநர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று அவர்களை ஆளுநர் விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு தரப்பினரையும் சந்தித்து வருகிறார். இந்நிலையில் நேற்று சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்த அற்புதம்மாள்,  “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரின் 28 ஆண்டுகால போராட்டத்துக்கு தற்போது வரை முடிவு கிடைக்கவில்லை.

இந்நிலையில், மக்களை ஒருங்கிணைத்து, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அவர்களை விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநரை கையொப்பமிட வலியுறுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தி வருகிறோம். 7 பேரை விடுதலை செய்யும் உத்தரவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், கையொப்பமிடும் வரையில் இப்பயணம் தொடரும். இவ்விவகாரத்தில் மத்திய அரசு தலையிட முடியாது என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து மனு அளித்தேன். அப்போது, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்பதில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே மாற்றுக் கருத்து இல்லை. இவ்விவகாரத்தில் அனைவரும் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். எனவே, உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஆளுநர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல் முறையாக ஸ்ரீவில்லிப்புத்துார் வழக்கறிஞர் சங்கம் சார்பில் 7 பேர் விடுதலைக்காக தீர்மானம் நிறைவேற்றி ஆதரவு தந்துள்ளனர். இதுபோல் மற்ற இடங்களிலும் ஆதரவு கரம் கிடைக்கும்” என்று தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com