முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரின் விடுதலை குறித்து தமிழக ஆளுநரே முடிவெடுப்பார் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 7 பேர் விடுதலை விவகாரம் ஆளுநர் முன் இருப்பதால் எங்களால் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என உச்சநீதிமன்றம் உறுதிப்பட தெரிவித்துள்ளது. மேலும் 7 பேர் விடுதலைக்கு எதிராக தொடரப்பட்ட மனுவையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த மனுவை ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களி்ன் உறவினர்கள் தாக்கல் செய்திருந்தனர்.
ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள 7 பேரையும் விடுவிப்பது தொடர்பாக 2014ஆம் ஆண்டு தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. அதற்கு, எதிர்ப்பு தெரிவித்து ராஜீவ் காந்தியுடன் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. அப்போது, இதே விவகாரத்தில் மத்திய அரசின் மேல்முறையீட்டு மனு விசாரணையில் இருந்ததால், அது முடிந்த பிறகே உறவினர்களின் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.