ஆளுநரை கடுமையாக விமர்சிக்கிறார்கள் ; தமிழருக்கென்று ஒரு நாகரிகம் இருக்கிறது- தமிழிசை

ஆளுநரை கடுமையாக விமர்சிக்கிறார்கள் ; தமிழருக்கென்று ஒரு நாகரிகம் இருக்கிறது- தமிழிசை
ஆளுநரை கடுமையாக விமர்சிக்கிறார்கள் ; தமிழருக்கென்று ஒரு நாகரிகம் இருக்கிறது- தமிழிசை

ஆளுநர்களை வம்புக்கு இழுப்பது தற்போது அதிகரித்துள்ளதாகவும், கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துவதும் இணையதளங்களில் மிகக் கீழ்த்தரமாக விமர்சிப்பதும் அதிகரித்துள்ளதாக தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரியில் துணை நிலைய ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரியில் துணை நிலைய ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் சாலிகிராமத்தில் உள்ள தனது இல்லத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு பொங்கல் வைத்து கொண்டாடினார். இந்தியா G20 அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளதை உணர்த்தும் விதமாக ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் இல்லத்தின் நுழைவாயிலில் "ஜி20 இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்" என்று கோலமிடப்பட்டிருந்தது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன், அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்தார். இந்த பொங்கல் ஒற்றுமையாக, தமிழரின் பெருமையை உயர்த்துவதாக, இந்தியாவின் பெருமையை உயர்த்துவதாக இருக்க வேண்டும். கொரோனாவுக்கு பிறகு அனைவரும் இணைந்து கொண்டாடும் பொங்கல் இது. இப்படி பொங்கல் கொண்டாடுவதற்கு காரணம் இறைவன் ஆசியும், தடுப்பூசியும் காரணம், சீனா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவில் இருந்து வெளிவராத நிலையில் இந்தியா பாதுகாப்பாக இருக்கிறது. அதற்குக் காரணம் பிரதமர், மற்றும் அனைத்து முன்களப் பணியாளர்கள் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வோம்.

மற்றவர்கள் மீது கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துவது, இணையதளங்களில் மிகக் கீழ்த்தரமாக விமர்சிப்பது, போன்ற அனுகுமுறையை விட்டுவிட்டு மற்றவர்களை புண்படுத்தாமல் அந்த நிகழ்வை கடந்து செல்ல வேண்டும். சமீபமாக ஒரு சிலர் ஆளுநரைக் கடுமையாக விமர்சிக்கின்றனர். முதலமைச்சர் யாரையும் கடுமையாக விமர்சிக்க வேண்டாம் என்று சொல்லிய போதும், ஒரு சிலர் கடுமையாக விமர்சிக்கின்றனர். இதை கட்டுப்படுத்த வேண்டும்.

தமிழ்நாடு என்கிற பெயருக்கு மிகப்பெரிய வரலாறு உண்டு, இதை அறிவித்த காமராஜருக்கு பெருமை உண்டு, அதை சட்டமாக்கிய அண்ணாதுரைக்கும் பெருமை உண்டு. அந்த பெருமையை காப்பாற்ற வேண்டியது தமிழர்களாக நம் கையில் தான் உள்ளது. கருத்தாக்கம் மோதல்களாக வெடிக்காமல், மோசமான விமர்சனமாக இல்லாமல், ஆக்கபூர்வமான விமர்சனமாக இருக்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் வார்த்தை பிரயோகம் என்பது மோசமாக இருந்துவருகிறது. நானே ஒரு கருத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தால் என்னையே விமர்சனம் செய்வார்கள். ஒரு கருத்தை சொன்னால் அந்த கருத்தை நாகரிகமாக எதிர்க்க வெண்டும். பொங்கல் எப்படி இனிமையாக உள்ளதோ அதுபோலவே இணையதளங்களில் வார்த்தைகள் இனிமையாக இருக்க வேண்டும்.

ஆளுநர்களை வம்புக்கு இழுப்பது தற்போது அதிகரித்துள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தில் ஆளுநர் உரையோடு தான் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பிக்க வேண்டும் என்று இருக்கிறது. இரண்டு புறமும் வரம்பு மீறாமல் பேச வேண்டும், கருத்து மோதல்கள் இல்லாமல், கருத்து பரிமாற்றமாக பேச வேண்டும். கருத்து வேற்றுமைகள் இருக்கலாம், கருத்து மோதல்கள் இருக்கலாம், ஆனால் அரசியலமைப்பு சட்டத்தை கடைபிடிக்க வேண்டும்.

இன்றிலிருந்து புதுவையில் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோம் , இங்கே (தமிழகத்தில்) கொடுக்கிறார்களா, இல்லையா என்பதை கேள்விக்குறியோடு நிறுத்திக் கொள்கிறேன். இந்தப் பொங்கல் தமிழக, தமிழ்நாடு பொங்கல், தமிழ்நாட்டில் தமிழக பொங்கல் ; தமிழ்நாட்டில் தமிழ் பொங்கல் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com