மேலூர் அருகே குழந்தை பாக்கியம் வேண்டி நாட்டு மருந்து சாப்பிட்ட பெண் பரிதாபமாக பலியாகி உள்ளார். அவரது இறப்பில் மர்மம் இருப்பதாக பெண்ணின் உறவினர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலூர் சூரக்குண்டு கல்லம்பட்டியை சேர்ந்தவர் செல்வக்குமார். கூலித் தொழிலாளியான இவர் அதே ஊரை சேர்ந்த நிர்மலா என்ற பெண்ணை கடந்த 2 ½ வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். 2 ½ வருடமாக நிர்மலாவுக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால் கணவர் வீட்டில் அடிக்கடி சண்டை வந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. இதனையடுத்து நேற்று மேலூர் அருகேயுள்ள சேக்கிபட்டி பகுதியில் குழந்தை பாக்கியம் கிடைக்க நாட்டு மருந்து கொடுப்பதாகவும், அதனை தான் வாங்கி தருவதாகக் கூறி நிர்மலாவை கணவர் செல்வக்குமார் அழைத்து சென்றார். நாட்டு மருந்தை அருந்திவிட்டு வந்த நிலையில் வீட்டிற்கு வந்த உடன் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
உடனடியாக அக்கம்பக்கத்தினர் நிர்மலாவை மீட்டு சிகிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நிர்மலா உயிரிழந்தார். இதனையடுத்து உறவினர்கள் மத்தியில் அவரது சாவில் மர்மம் இருப்பதாகவும், கணவனின் குடும்பத்தினரே கொலை செய்திருக்கக் கூடும் என சந்தேகத்தை எழுப்பியுள்ளனர். ஆகவே காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிர்மலாவின் உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்டு மருந்து சாப்பிட்டு பெண் உயிரிழந்தது மேலூர் பகுதியில் சோகத்தை வரவழைத்துள்ளது. இதுகுறித்து மேலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.