யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்ற மாணவரை நேர்காணல் செய்த மாநகராட்சி பெண் கமிஷனர்!

யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்ற மாணவரை நேர்காணல் செய்த மாநகராட்சி பெண் கமிஷனர்!
யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்ற மாணவரை நேர்காணல் செய்த மாநகராட்சி பெண் கமிஷனர்!

சிவில் சர்வீசஸ் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற நாகர்கோவிலை சேர்ந்த இன்ஜினியரிடம் கலந்துரையாடி அதனை வீடியோவாக தயார் செய்து, சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக மாநகராட்சி ஃபேஸ்புக் பக்கத்தில் ஆணையர் ஆஷா அஜித் வெளியிட்டுள்ளார்.

குமரி மாவட்டத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு குறைவில்லை. மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே தவிர, பத்மநாபபுரம் சப்-கலெக்டர் சரண்யா அறி, மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், பயிற்சி கலெக்டர் ரிஷப் என்று பலர் உள்ளனர். இவர்கள் தங்களுக்கு கிடைக்கின்ற சந்தர்ப்பங்களில் மாணவர்களுக்கு ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராவது தொடர்பாக பயிற்சி அளிக்க தவறுவது இல்லை.

நாகர்கோவில் புத்தக கண்காட்சி நடைபெற்றபோது அதில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கருத்துரை வழங்கியிருந்தனர். இவர்கள் சிவில் சர்வீசஸ் தேர்வில் சிறப்பிடம் பெற்றவர்கள் என்பது மற்றொரு சிறப்பு ஆகும்.

சரண்யா அறி,  2015-ம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீசஸ் தேர்வில் அகில இந்திய அளவில் இரண்டாம் இடமும், தமிழக அளவில் முதலிடம் பெற்றவர் ஆவார். அதே போன்று நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், 2015-ம் ஆண்டு நடந்த சிவில் சர்வீசஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 40-வது இடத்தில் தேர்ச்சி பெற்றவர் ஆவார்.

முன்னதாக ஆஷா அஜித் கேரள மாநில அரசின் கல்வி தொலைக்காட்சியில் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்தல், அதற்காக கல்வியாளர்களிடம் நேர்காணல் நடத்துதல் என்று மாணவர்களுக்காக செயல்பட்டவர்.

தற்போது ஊரடங்கு காரணமாக பல தரப்பட்ட மாணவர்களும் வீடுகளில் முடங்கியுள்ளனர். ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் யுபிஎஸ்சி தேர்வில் தமிழக மாணவர் கணேஷ்குமார் அகில இந்திய அளவில் 7-வது இடம் பிடித்து, தமிழக அளவில் முதலிடம் பெற்ற நிலையில், ஆணையர் ஆஷா அஜித் நாகர்கோவிலில் அவரை சந்தித்து உரையாடினார்.

நேரடி பயிற்சி வகுப்புக்கு செல்லாமல் வீட்டில் இருந்தே கற்றுத் தேர்ந்த அவரிடம், போட்டித் தேர்வுக்கு தயாராகிக் கொண்டு இருக்கும் மாணவர்களுக்காக தகவல்களை கேட்டுப் பெற்றார். மேலும் போட்டித்தேர்வுகளில் வெற்றி பெறுவது எப்படி, மாணவர்கள் அதற்காக என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் இருவரும் கலந்துரையாடியது மட்டுமின்றி, அதனை வீடியோவாக பதிவு செய்து நாகர்கோவில் மாநகராட்சியின் ஃபேஸ்புக் பக்கங்களில் அதனை வெளியிட்டுள்ளார். இது மாணவ மாணவியர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

படம் உதவி: ஜாக்சன் ஹெர்பி  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com