அறுந்து கிடந்த மின் கம்பியை தவறுதலாக தொட்ட மகனை காப்பாற்ற முயன்ற தந்தை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம் விருதுநகர் அருகே நிகழ்ந்துள்ளது.
ராஜபாளையம் அருகே உள்ள ஆவரம்பட்டியை சேர்ந்த திருமுருகன் என்பவரின் 5 வயது மகன், வீட்டிற்கு அருகே அறுந்து தொங்கிக் கொண்டிருந்த மின் கம்பியை தவறுதலாக தொட்டுள்ளான். அப்போது மின்சாரம் தாக்கி சிறுவன் அலறிய நிலையில் அவனை காப்பாற்றும் நோக்கில் தந்தை திருமுருகன் தள்ளிவிட்டுள்ளார். சிறுவன் சில அடி தூரம் தள்ளி விழுந்த நிலையில் திருமுருகன் மீது கம்பி விழுந்து அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.
அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் திருமுருகனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். உயிரிழந்த திருமுருகனின் மகனுக்கு மதுரை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை தரப்பட்டு வருகிறது. திருமுருகனின் மனைவி அளித்த புகாரின்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தங்கள் பகுதியில் சுமார் 20 இடங்களில் மின்சார கம்பிகள் அறுந்து தொங்குவதாகவும் அது குறித்து புகார் தரப்பட்டும் மின்வாரிய ஊழியர்கள் அலட்சியமாக இருந்ததாகவும் மக்கள் குற்றஞ்சாட்டினர். திருமுருகன் கூட தன் வீட்டருகே அறுந்து தொங்கிய கம்பி குறித்து ஏற்கனவே புகார் அளித்திருந்தார் என்றும் அது கண்டு கொள்ளப்படாதால் ஒரு உயிர் பறிபோயுள்ளதாகவும் அக்கம்பக்க மக்கள் குற்றஞ்சாட்டினர்.