நரிக்குறவர்கள் இறக்கிவிடப்பட்ட விவகாரம்: பேருந்து ஓட்டுநர், நடத்துநர் தற்காலிக பணி நீக்கம்

நரிக்குறவர்கள் இறக்கிவிடப்பட்ட விவகாரம்: பேருந்து ஓட்டுநர், நடத்துநர் தற்காலிக பணி நீக்கம்
நரிக்குறவர்கள் இறக்கிவிடப்பட்ட விவகாரம்: பேருந்து ஓட்டுநர், நடத்துநர் தற்காலிக பணி நீக்கம்
அரசு பேருந்தில் பயணித்த நரிக்குறவர் குடும்பத்தினரை பாதிவழியில் இறக்கிவிட்ட ஓட்டுனர், நடத்துனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் நாள்தோறும், நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த மக்கள் பயணிப்பது வழக்கம். அதன்படி, நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு புறப்பட்ட பேருந்தில் சிறுவன் உட்பட 3 பேர் கொண்ட நரிக்குறவர் குடும்பத்தினர் பயணித்துள்ளனர். அப்போது, பேருந்தின் நடத்துனர் அவர்களை வலுக்கட்டாயமாக பேருந்தில் இருந்து பாதி வழியில் இறக்கி விட்டுள்ளார். முன்னதாக, மீனவ பெண்மணியை பேருந்தில் ஏற்ற மறுத்த சம்பவம் பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், தற்போது வெளியாகி உள்ள வீடியோ மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர்களை பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட ஓட்டுனர் மற்றும் நடத்துனரை தற்காலிக பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் நாகர்கோவில் மண்டல பொதுமேலாளர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
''தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் நாகர்கோவில் மண்டலம் திருவட்டார் கிளை பேருந்து எண் TN74 N1802, டிசம்பர் 9 அன்று மாலை சுமார் 6.30 மணியளவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து திருநெல்வேலி புறப்பட்டது. இந்த பேருந்தில் ஓட்டுநர் நெல்சன் மற்றும் நடத்துனர் ஜெயதாஸ் பணியில் உள்ளனர். இந்த பேருந்தில் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த ஒரு வயதான ஆண், ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை ஏறியுள்ளனர். பேருந்து வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்தபோது மேற்படி பயணிகள் மூவரையும் பேருந்திலிருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இறங்கிவிட்டதாக தெரிகிறது. இந்நிகழ்வை அருகில் உள்ள பேருந்து நிலைய காப்பாளர்களிடம் தெரிவிக்காமல் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் தன்னிச்சையாக செயல்பட்டு உள்ளனர்.
பேருந்து நிலையத்தின் வெளியே நின்று கொண்டிருந்த ஊடகவியலாளர்கள் இதனை வீடியோ எடுத்து ஒளிபரப்பு செய்த பின்னரே இந்நிகழ்வு நிர்வாகத்திற்கு தெரிய வருகிறது. எனவே பொறுப்பற்ற முறையில் பணி செய்து அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்திய ஓட்டுனர் மற்றும் நடத்துனர் தற்காலிக பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com