“பதிவு செய்யப்பட்ட 14 நோயாளிகள் எங்கே?” - திடீர் ஆய்வின்போது விளாசிய காஞ்சிபுரம் ஆட்சியர்
ஸ்ரீபெரும்புதூர் மருத்துவமனையில் மருத்துவ பதிவேட்டில் உள்நோயாளியாக பதிவு செய்யப்பட்ட 14 நோயாளிகள் எங்கே என மருத்துவர்களை திடீர் ஆய்வின்போது விளாசிய மாவட்ட ஆட்சியர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு, மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி திடீரென நேரில் சென்று வருகைப் பதிவேட்டை ஆய்வுசெய்தார். மேலும், வெளி நோயாளிகளுக்கு மருந்துகள் வழங்கும் இடம் ஆகியவற்றை ஆய்வுசெய்து, முறையாக மருந்துகள் பாதுகாக்கப்படுகின்றனவா என்பதையும் சோதனை செய்தார்.
இதனைத் தொடர்ந்து, உள்நோயாளிகள் பிரிவுகளுக்குச் சென்று பார்வையிட்ட ஆட்சியர், அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படும் மருந்து அறிக்கையை ஆய்வுசெய்தார். அப்போது இன்று ஒரு நாளில் மட்டும் மருத்துவமனைக்கு புறநோயாளிகள் வருகை பதிவேட்டில் 15 நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்கள். ஆனால் மருத்துவமனையில் ஒரே ஒரு நோயாளி மட்டுமே தான் தங்கியிருந்தார். மீதமிருந்த நோயாளிகள் எங்கே சென்றனர் என மாவட்ட ஆட்சியர் மருத்துவர்களை விளாசினார். மாவட்ட ஆட்சியர் கேட்கும் கேள்விக்கு பதில் கூற முடியாமல் மருத்துவர்கள் திணறினர்.
மேலும் மருத்துவர்கள் மருத்துவருக்கு உண்டான உடையில் இல்லாமல் இருந்ததால், இனி எப்போதும் மருத்துவ உடையில் தான் மருத்துவர்கள் மருத்துவமனைகள் பணி புரிய வேண்டும் என அறிவுறுத்தினார். சுழற்சி முறையில் 24 மணி நேரமும் மருத்துவர்களும், செவிலியர்களும், மருத்துவமனை பணியாளர்களும் பணியாற்றிட வேண்டும் என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தை சுற்றி வந்த மாவட்ட ஆட்சியர் மருந்து அறை, பரிசோதனை அறை, காத்திருப்போர் அறை, கழிவறையை பார்வையிட்டார். சுகாதார பணியாளர்கள் மூலம் செடிகள் மற்றும் புதர்களை அகற்றி காலை மற்றும் மாலை வேளைகளில் கொசு மருந்து புகை அடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலரை அறிவுறுத்தினார்.
- பிரசன்னா