சிறுமி கொலை வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி !

சிறுமி கொலை வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி !
சிறுமி கொலை வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி !

போரூர் சிறுமி கொலை வழக்கில் தஷ்வந்த் குற்றாவளி என செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.

சென்னை குன்றத்தூர் பகுதியிலுள்ள போரூரை சேர்ந்த  6 சிறுமி கடந்தாண்டு பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தஷ்வந்த் என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் தனது தாய் சரளாவை கொலை செய்துவிட்டு நகைகளுடன் தலைமறைவானார். தனிப்படை அமைத்து தஷ்வந்த்தை தீவிரமாக தேடிவந்த தமிழக காவல்துறை, மும்பையில் அவரை கைது செய்‌தது. விமான நிலையம் அழைத்துச் செல்லும் வழியில், போலீஸாரைத் தாக்கிவிட்டு தஷ்வந்த் தப்பினார். தப்பியோடிய அவரை மீண்டும் 24 மணி நேரத்திற்குள் மும்பை போலீஸார் உதவியுடன் சென்னை காவல்துறையினர் கைது செய்தனர். பின் தஷ்வந்த் சென்னை கொண்டுவரப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

போரூர்  சிறுமி கொலை வழக்கு விசாரணை செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த 14ஆம் தேதி இருதரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில், இன்று தீர்ப்பு வழங்கவுள்ளதாக நீதிபதி தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து குற்றவாளி தஷ்வந்த் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்ற வளாகம் முழுவதும் பாதுகாப்புக்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். நீதிமன்றத்தில் தஷ்வந்த் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் கதவுகள் மூடப்பட்டன. நீதிமன்றத்திற்குள் போலீஸ் தரப்பு வழக்கறிஞர்கள், அரசுத் தரப்பு வழக்கறிஞர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. செய்தியாளர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதற்கிடையே நண்பகல் 12 மணிக்கு தீர்ப்பு அறிவிக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், 3 மணி தீர்ப்பு வழங்கப்படும் என கூறப்பட்டது. அதன்படி 3 மணியளவில் வெளியான தகவல்படி, தஷ்வந்த் குற்றவாளி என செங்கல்பட்டு மகளிா நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் அறிவித்தார். குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்புச் சட்டத்தின்படி தஷ்வந்த் குற்றவாளி என நிருபணம் செய்யப்பட்டதாக நீதிபதி தெரிவித்தார். ஆள்கடத்தல், கொலை, பாலியல் குற்றங்களை ஆகியவை தஷ்வந்த் மீது நிரூபணமானது. சி.ஆர்.பி.சி. 201, 202, 354, 363, 366 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது என நீதிபதி வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இதனிடையில் குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு நீதிபதியிடம் தஷ்வந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். நேரம் குறிப்பிடாமல் தஷ்வந்துக்கான தண்டனை விவரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com