மகளை தீவிரவாதியைப்போல சித்தரிக்கின்றனர் - வளர்மதி தந்தை வேதனை

மகளை தீவிரவாதியைப்போல சித்தரிக்கின்றனர் - வளர்மதி தந்தை வேதனை
மகளை தீவிரவாதியைப்போல சித்தரிக்கின்றனர் - வளர்மதி தந்தை வேதனை

சேலத்தைச் சேர்ந்த வளர்மதி என்ற மாணவி குண்டர் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டிருப்பது அவரது குடும்பத்தினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சாதாரண மாணவியை தீவிரவாதியாக போலீஸ் சித்தரிப்பதாக அவரது தந்தை வேதனை தெரிவித்துள்ளார். 

சேலத்தில் கோரிமேடு அரசு மகளிர் கலைக் கல்லூரி முன்பு, ஹைட்ரோகார்பன் மற்றும் மீத்தேன் திட்டங்களுக்கு எ‌திராக துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்த இதழியல் பிரிவு மாணவிகள் வளர்மதி, ஜெயந்தி ஆகியோரை போலீஸார் கடந்த 12ம் தேதி கைது செய்தனர். ஜெயந்தி விடுவிக்கப்பட்ட நிலையில், வளர்மதி கடந்த இரு நாள்களுக்கு முன்பு குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டார். நன்கு படித்து வந்த மாணவியான வளர்மதி, குண்டர் தடுப்புக் காவலில் வைக்கும் அளவுக்கு என்ன குற்றம் செய்தார் என அவரது உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.  

இதனிடையே கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாணவி வளர்மதியை மனித உரிமை ஆர்வல வழக்கறிஞர்கள் நேரில் சந்தித்தனர். சமூக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவியை குண்டர் சட்டத்தில் கைது செய்தது சட்டத்துக்குப் புறம்பானது என்று வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்தனர். இதுதொடர்பாக சேலத்தில் கருத்து தெரிவித்த தமிழிசை சவுந்திரராஜன், மாணவர்கள் மத்தியில் தீவிரவாத அமைப்புகள் ஊடுருவி விடாமல் இருக்க அனைவரும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். ஆனால், தனது மகள் வளர்மதியை தீவிரவாதி, நக்சலைட்‌ போன்று இந்த அரசுமும், காவல்துறையினரும் சித்தரிப்பதாக அவரது தந்தை மாதயன் வேதனை தெரிவித்துள்ளார்.

அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல தலைவர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். மாணவி வளர்மதியை விடுவிக்க வேண்டுமென்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாணவி வளர்மதி என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com