இந்தியக் கடலோரப் பகுதிகளுக்கு ஆபத்து.. 15 செ.மீ உயரும் கடல் மட்டம்! புதிய ஆய்வில் அதிர்ச்சி!
பெங்களூரு அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வு, 2021–2040 காலத்துக்குள் இந்தியக் கடலோரப் பகுதிகளில் காலநிலை மாற்றம் தீவிரமாவதை எச்சரிக்கிறது. சராசரி வெப்பநிலை 1.5°C வரை உயரும் நிலையில், 2050க்குள் கடல் மட்டம் 15 செ.மீ உயர்ந்து, கடலோர அரிப்பு, வாழ முடியாத கிராமங்கள், மீன்பிடித் தொழில் சரிவு, பெண்களின் உடல்நலப் பிரச்சினைகள் போன்ற கடுமையான விளைவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
பெங்களூரு அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ‘இந்திய கடலோரப்பகுதி: காலநிலை கணிப்புகள் 2021–2040' என்ற இந்த அறிக்கை, பல முக்கியத்தரவுகளை எச்சரிக்கையாக முன்வைத்துள்ளது.
1960ஆம் ஆண்டின் அடிப்படைத் தரவுகளுடன் ஒப்பிட்டு, மாவட்டவாரியாக இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் படி இந்தியாவின் சராசரி வெப்பநிலை 1 டிகிரி 5 செல்சியஸ் வரை உயரக்கூடும். நாட்டின் சுமார் 40 கடலோர மாவட்டங்களில் கோடைக்கால வெப்பநிலை 1 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக அதிகரிக்கும். இதில் கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்டம் அதிகபட்சமாக 1 புள்ளி 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்வைச் சந்திக்கும். கேரளம் மற்றும் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் மனித உடலால் தாங்க முடியாத, உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடிய 31 டிகிரி செல்சியஸ் வரையிலான ‘வெட்-பல்ப் (Wet Bulb)' வெப்ப அழுத்தம் ஏற்படும்.
மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் கடலோரப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடையும். குறிப்பாக, மும்பை புறநகர்ப் பகுதியில் கூடுதலாக 6 நாட்கள் வரை கனமழை நீடிக்கும். குஜராத்தின் சூரத் மற்றும் பவநகர் மாவட்டங்களில் முறையே 23% மற்றும் 24% அளவுக்கு பருவமழை அதிகரிக்கும். இரண்டாயிரத்து 50ஆம் ஆண்டுக்குள் கடல் மட்டம் 15 சென்டிமீட்டர் வரை உயர வாய்ப்புள்ளது. இதனால் கடலோர அரிப்பு ஏற்பட்டு, ஒடிஷாவின் கஞ்சாம் போன்ற பகுதிகளில் கிராமங்கள் மனிதர்கள் வாழ முடியாத கிராமங்களாக மாறும் அபாயம் உள்ளது.
கடல் வெப்பமடைவதால் கோவாவில் பாரம்பரிய மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டு மீனவர்களின் வலைகள் காலியாகின்றன. சுந்தரவனப் பகுதியில் கடல்நீர் புகுவதால் பெண்களுக்குத் தோல் நோய்கள் மற்றும் மாதவிடாய் ஆரோக்கியப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. காலநிலை மாற்றம் என்பது எதிர்காலப் பிரச்சினை அல்ல, அது தற்போதைய எதார்த்தம் என்றும், உள்ளூர் நிர்வாகங்கள் இதற்கு உடனடியாகத் தயாராக வேண்டும் என்றும் இந்த அறிக்கை எச்சரிக்கிறது.

