மு.க.அழகிரி மகளுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்
முறையாக வருமான வரி கணக்கு செலுத்தாத வழக்கில் மு.க.அழகிரியின் மகள் அஞ்சுகச் செல்விக்கு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியால் திமுகவிலிருந்து நீக்கப்பட்டவர் மு.க.அழகிரி. கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு அக்கட்சியில் நுழைய அவர் முட்டி மோதியும் அது பலன் அளிக்கவில்லை. ஆகவே அவர் பாஜகவில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் முறையாக வருமான வரி கணக்கு செலுத்தாத வழக்கில் அழகிரியின் மகள் அஞ்சுகச் செல்விக்கு எதிராக, எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் ஜாமீனில் வெளி வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. மு.க.அழகிரி மகள் அஞ்சுகச் செல்வி கடந்த ஆறு ஆண்டுகளாக சுமார் 50 லட்சம் வரை முறையாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாததையடுத்து அவருக்கு எதிராக வருமான வரி துறை வழக்கு தொடர்ந்தது.
எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் தொடரப்பட்ட இந்த வழக்கில் அஞ்சுகச் செல்வி தொடர்ந்து அஜராகாமல் இருந்து வந்தார். இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் நீதிபதி மலர்மதி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அமெரிக்காவில் வசித்து வரும் அஞ்சுகச் செல்வி இன்றும் ஆஜராகாததையடுத்து, அவருக்கு எதிராக ஜாமீனில் வெளி வர முடியாத பிடிவாரண்ட்டை பிறப்பித்து நீதிபதி மலர்மதி உத்தரவிட்டுள்ளார்.