வெள்ளம் பாதித்த பகுதிகளை நாளை முதலமைச்சர் ஆய்வு
தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆய்வு செய்கிறார்.
ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து நாளை காலை 6.20 மணிக்கு விமானம் மூலம் கோவை செல்கிறார். அங்கிருந்து காரில் ஈரோடு மாவட்டம் பவானிக்குச் சென்று, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்கிறார். அதனைத் தொடந்து நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொள்கிறார்.
அதன்பின்னர் ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடுகிறார். ஆய்வைத் தொடர்ந்து ஈரோட்டில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கையைத் தொடர்ந்து, வைகை அணையில் இருந்து நாளை மறுதினம் தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் பெரியாறு பாசனப் பகுதிக்கும், திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள பாசனப் பகுதிக்கும் நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வினாடிக்கு ஆயிரத்து 130 கனஅடி வீதம் மொத்தம் 8 ஆயிரத்து 461 மில்லியன் கனஅடிக்கு மிகாமல், நாளைமறுதினம் முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இதனால் மதுரை, திண்டுக்கல் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 2 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி, உயர் மகசூல் பெற வேண்டுமென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.