கஜா புயல் பாதிப்புக்கு மத்திய அரசு 353 கோடி இடைக்கால நிவாரணம்
கஜா புயல் பாதிப்புக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.353.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.
கடந்த 16-ஆம் தேதி ஏற்பட்ட கஜா புயல் காரணமாக யாரும் நினைத்துப் பார்க்காத அளவுக்கு வரலாறு காணாத பேரழிவை டெல்டா மாவட்ட மக்கள் சந்தித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டின் எட்டு மாவட்டங்களில் ஊடுருவிய கஜா புயல், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய நான்கு மாவட்டங்களில் உயிர்ச்சேதங்களையும், பொருட்சேதங்களையும், உறவாக வளர்த்து வந்த ஆடு, மாடுகளையும் சூறையாடி சென்றுள்ளது.
ஆறா வடுவாக மாறிய கஜா புயலினால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் டெல்டா மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சிகளும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி அளித்து வருகின்றனர். கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களும் நிதி அளித்துள்ளனர். சினிமா துறை, தொழில் துறை பிரபலங்கள் பலரும் முதலமைச்சரை சந்தித்து புயல் நிவாரண நிதி அளித்து வருகின்றனர்.
கஜா புயல் பாதிப்புகள் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேரில் ஆய்வு மேற்கொண்டு மக்களின் குறைகளை ஏற்கெனவே கேட்டறிந்தார். பின், தனது ஒரு மாத ஊதியத்தை கஜா புயல் நிவாரண நிதியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அளித்தார். நவம்பர் மாதத்திற்காக ஊதியம் ரூ3.5 லட்சத்தை அவர் நிதியாக வழங்கியுள்ளார்.
இதைத்தொடர்ந்து கஜா புயல் பாதித்த பகுதிகளை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார். மேலும் கஜா புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு மத்திய அரசின் திட்டம் மூலம் வீடு கட்டித்தரப்படும் என உறுதி அளித்தார்.
இதனிடையே காஜ புயல் நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்தினார். பாதிப்புகள் குறித்து அறிய மத்தியக் குழு ஒன்றையும் ஆய்வுக்காக அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். அதனையடுத்து தமிழகம் வந்த மத்தியக் குழு 3 நாட்கள் ஆய்வு மேற்கொண்டு சென்றுள்ளது.
இந்நிலையில், கஜா புயல் பாதிப்புக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.353.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். மத்தியக் குழுவின் இறுதி அறிக்கைக்கு பிறகு நிவாரண நிதி கூடுதலாக ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.