குட்கா வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் - அமைச்சர்; டிஜிபி பெயர்கள் இல்லை

குட்கா வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் - அமைச்சர்; டிஜிபி பெயர்கள் இல்லை
குட்கா வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் - அமைச்சர்; டிஜிபி பெயர்கள் இல்லை

தமிழக அரசியலில் புயலைக் கிளப்பிய குட்கா ஊழல் வழக்கில் ஆவணங்களை ஆய்வு செய்த பின் முதற்கட்டமாக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டில் மாதவரத்தில் உள்ள ஒரு குட்கா குடோனில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் குட்கா ஊழல் விவகாரம் வெளிவரக் காரணமாக அமைந்தது. பின் இது குறித்த வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து குட்கா ஊழல் வழக்கு, லஞ்ச ஒழிப்புத் துறையிடம் இருந்து சிபிஐக்கு மாறியது.பின் கடந்த மே மாதம் சிபிஐ வழக்குப் பதிவு செய்து குட்கா ஊழல் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்தது. இதனைத்தொடர்ந்து சிபிஐ விசாரனையில் மாதவ ராவிடம் இருந்த டைரியில் 44 கோடி ரூபாய் கையூட்டு பெற்றவர்களின் விவரங்கள் உள்ளதாக கூறப்பட்டது. 

அதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னை பெருநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்ததாக தகவல் வெளியானது. அதனடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்திய சிபிஐ அதிகாரிகள் சுமார் 35 இடங்களில் திடீர் சோதனை நடத்தினர். 

இதனைத்தொடர்ந்து குட்கா விவகாரத்தில் இடைத்தரர்களாக செயல்பட்டதாக ராஜேஷ், நந்தகுமார் ஆகிய இருவரை முதலில் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் கிடங்கு உரிமையாளர் மாதவ ராவை கைது செய்தனர். மேலும் இந்த வழக்குத் தொடர்பாக உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில்முருகன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார், கலால் வரித்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், கிடங்கு உரிமையாளர் உமாசங்கர் குப்தா, சீனிவாசராவ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் குட்கா வழக்கில் முதற்கட்டமாக நவம்பர் 8 ஆம் தேதி சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில் குட்கா கிடங்கு உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேருக்கு எதிராக மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதில் சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் செப்டம்பர் 25 ஆம் தேதியும், மற்ற 5 பேரும் செப்டம்பர் 5 ஆம் தேதியும் கைதாகி புழல் சிறையில் உள்ளனர். அமைச்சர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் என பலர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில், கைதான 6 பேர் மீது மட்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தேவைப்பட்டால் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் எனவும் சிபிஐ அதிகாரிகள் சிபிஐ நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com