இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என விமர்சித்த எச்.ராஜா மீது வழக்கு பதிவு
இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என விமர்சித்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்யக்கோரி ஆற்காடு நகர காவல் நிலையத்தில் அனைத்துக்கட்சி சார்பில் பொது மக்கள் புகார் மனு அளித்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என்று கருத்து தெரிவித்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்யக்கோரி அனைத்துக்கட்சியின் சார்பில் மேல்விஷாரத்தை சேர்ந்த பொது மக்கள் ஆற்காடு நகர காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். கடந்த 15-ம் தேதியன்று தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த எச்.ராஜா, கமலின் பேச்சுக்கு கருத்து தெரிவிக்கும் விதமாக இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்துக்கள் ஒடுக்கப்பட்டு கொத்தடிமைகளாக இருப்பதாகவும். குறிப்பாக மேல்விஷாரம் பகுதியில் முஸ்லீம்களின் ஆதிக்கம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்த கருத்துக்கு மேல்விஷாரம் பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்களிடையே கடுமையான எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அவ்வாறு பேசிய எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி அனைத்துக்கட்சினர் மற்றும் பொது மக்கள் சார்பில் புகார் மனுவினை ஆற்காடு நகர காவல் நிலையத்தில் அளித்தனர். இந்த புகாரின் மீது முதல் தகவல் சுற்றறிக்கை (எப்.ஐ.ஆர்) பதிவு செய்ய போலீசார் மறுத்ததால் ஆய்வாளர் புகழேந்தியிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பதட்டமான சூழல் ஏற்பட்டதால் காவல் துணைக்கண்காணிப்பாளர் கலைச்செல்வன் நேரில் வந்து சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதையடுத்து பொது மக்கள் கலைந்து சென்றனர்.