தொமுச, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்க ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நான்காவது நாளாக இன்றும் தொடர்கிறது. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து முடங்கியுள்ளது.
ஊதிய உயர்வு காரணமாக, தொமுச, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்க ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தினால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நான்காவது நாளாக போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தின் காரணமாக, பல இடங்களில் குறைவான அளவில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதால் மக்கள் பெரும் பாதிப்பு உள்ளாகியுள்ளனர்.
தற்காலிக ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் மூலம் பேருந்துகளை இயக்கி மக்களின் பாதிப்பை குறைத்து வருவதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. எனினும் முழுமையான அளவில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால், வேலை மற்றும் வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் பாதிக்கப்பட்டனர். வார இறுதியில் சொந்த ஊர் திரும்ப திட்டமிட்டிருந்த பலர், பயணத்தை கைவிட்டுள்ளனர். ஊதிய உயர்வு கோரிக்கையை அரசு ஏற்கும் வரை போராட்டம் தொடரும் என தொமுச, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.