முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த ஆறுமுகசாமி ஆணையம், 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று முதல் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ள நிலையில், ஆணையம் கடந்து வந்த பாதையை பார்க்கலாம்.
2017 செப்டம்பர் 25: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.
2017 நவம்பர் 22: சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் நீதிபதி ஆறுமுகசாமி தனது விசாரணையைத் தொடங்கினார்.
2017 டிசம்பர் 24: முதல் கட்டமாக விசாரணை ஆணையத்தின் காலம் 3 மாதங்களாக நிர்ணயிக்கப்பட்டது. குறிப்பிட்ட காலத்துக்குள் விசாரணை முடிவடையாததால் 2017 டிசம்பர் 24-ஆம் தேதியில் இருந்து 6 மாதங்களுக்கு, அதாவது 2018 ஜூன் 24-வரை ஆணையத்தின் காலத்தை தமிழக அரசு முதன்முதலாக நீட்டித்தது. அதன்பின்னர் அடுத்தடுத்து ஆணையத்துக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு கொண்டே வந்தது. இதுவரை 12 முறை ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
2019 பிப்ரவரி 8: ஆறுமுகசாமி ஆணையத்துக்கு எதிராக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், ஆணையத்தின் விசாரணைக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது.
2019 ஏப்ரல் 26: இந்த தீர்ப்பை எதிர்ப்பு அப்போலோ நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்தின் அனைத்து விசாரணைக்கும் இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
2021 டிசம்பர் 20: ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ, மருத்துவக் குழுவை அமைக்குமாறு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆணையம் தொடர்ந்து விசாரணை நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவுவதற்காக 8 உறுப்பினர்களை கொண்ட மருத்துவர்கள் குழுவை எய்ம்ஸ் நியமித்தது.
2022 மார்ச் 7: ஜெயலலிதா மரணம் தொடர்பாக அடுத்தக்கட்ட விசாரணை 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.
இதையும் படிக்கலாம்: ``நாங்கள் பரிந்துரைத்தும் ஜெயலலிதா கேட்கவில்லை”-அப்போலோ மருத்துவர் வாக்குமூலம்