ஓவியத் திறமையால் வியப்பை ஏற்படுத்திய நாடோடி ஓவியர்
கன்னியாகுமரியில் நலிவடைந்த ஓவியர் ஒருவர் செடிகொடிகளின் இலை சாற்றைக் கொண்டு வெறும் கையில் வரைந்த முப்பரிமான சுவர் ஓவியம் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.
ஆயக்கலைகள் 64ல் ஓவியக்கலை, மொழிகளையும் தேசங்களையும் கடந்து என்றும் உயிர்வாழும் கலைகளில் ஒன்றாகும். அஜந்தா குகை ஓவியங்கள் டாவின்சியின் ஓவியங்கள் போன்றும் உலகில் பல ஓவியங்கள் இன்றும் உயிருடன் பேசிக்கொண்டு இருப்பதாக அனைவராலும் உணரப்படுகிறது. இப்படி ஓவியம் என்பது இந்த உலகிற்கு பல விழிப்புணர்வுகளையும், தத்துவங்களையும் தந்துகொண்டு இருக்கின்றன.
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 55 வயது நிரம்பிய சதானந்தத்திற்கு தெரிந்த தொழிலே ஓவியம் வரைவதுதான். ஒரு நாடோடிபோல் ஒவ்வொரு ஊராக சென்று மக்கள் கூடும் இடங்களில் சாலை ஓரங்களில் நிற்கும் செடிக்கொடிகளை பறித்து அதன் சாறுகளை சேகரித்து, கரித்துகள்களை பயன்படுத்தியும் பொது இடங்களில் இருக்கும் சுவர்களில் முப்பரிமான சுவர் ஓவியங்கள் வரைகிறார். இதை பார்த்து செல்லும் பொதுமக்கள் அளிக்கும் அன்பளிப்புகளைக் கொண்டு பசியாற்றி வாழ்ந்து வருகிறார். எந்தவிதமான உபகரங்களும் இல்லாமல் வெறும் கைகளால் இவர் வரையும் ஓவியங்களுக்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் சதானந்தம் நாகர்கோவில் வடசேரி பகுதியில், பாழ்பட்டு கிடந்த ஒரு சுவற்றில் முப்பரிமான முறையில் இயற்கை வளங்களை சித்தரிக்கும் ஓவியம் ஒன்றை வரைந்துக் கொண்டிருந்தார். அதை கண்டு ஏராளமான பொதுமக்கள் வியந்தனர். ஆனால் அந்த சுவரின் உரிமையாளர் இந்த ஓவியரை அங்கிருத்து அப்புறப்படுத்தியது மட்டுமின்றி அந்த ஓவியத்தை ஒரு நொடியில் அளித்த சம்பவம் பொதுமக்களுக்கு கண்ணீரை வர வைத்தது. இவரின் திறமையை பாராட்டி பொதுமக்கள் முடிந்தவரை அன்பளிப்புகள் கொடுத்ததோடு தங்களுக்கு தேவையான சித்திரங்கள் வரைவதற்காக வாய்ப்புகளையும் வழங்கினார்கள். இச்சம்பவம் ஓவியக்கலை அழிந்துவிடவில்லை என்பதை ஆதரத்துடன் உறுதிப்படுத்தியது. மேலும் இதுபோன்ற திறமை மிக்க ஓவியர்களை ஊக்கபடுத்தும் வகையில் அரசு முன்வந்து உதவ வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.